2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு: நாட்டுக்கு நஷ்டமே ஏற்படவில்லை-கபில் சிபல்

டெல்லியில் நிருபர்களிடம் பேசிய அவர், நாட்டின் தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி (Comptroller and Auditor General-CAG) உள்பட அனைத்துத் துறைகளையும் காங்கிரசும் அரசும் மதிக்கிறது. இதை காங்கிரசின் வரலாற்றைப் பார்த்தாலே புரியும். எந்த அரசுத் துறையையும் காங்கிரஸ் குறை கூறியதே இல்லை.
அதே நேரத்தில் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கணக்குத் தணிக்கை அதிகாரி கூறியுள்ள சில தகவல்கள் வலியைத் தருகின்றன. 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனையால் நாட்டுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாக அவர் எந்தக் கணக்கின் அடிப்படையில் கூறியுள்ளார் என்று தெரியவில்லை.
சில தவறான கணக்கீட்டு முறைகளைப் பின்பற்றி இந்தக் கணக்குக்கு அவர்கள் வந்திருக்கிறார்கள். இதில் ஏராளமான பிழைகளும் தவறுகளும் உள்ளன. எந்த அடிப்படையும் இல்லாத இந்தக் கணக்கை ஏற்கவே முடியாது.
ரூ. 1.76 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாகக் கூறுவது பெரும் பரபரப்பை உண்டாக்க வேண்டுமானால் உதவலாம். ஆனால், இந்த எண்ணிக்கையை தணிக்கைத் துறை எப்படி எட்டியது என்பதைப் பார்க்க வேண்டும். அதைப் பார்த்தால் அதில் பெருமளவில் தவறுகள் இருப்பது புரியும்.
ரூ. 1.76 லட்சம் கோடி என்றெல்லாம் சொன்னால், அந்த நஷ்டத்துக்கு காங்கிரஸ் கூட்டணி அரசு எந்த வகையிலும் பொறுப்பல்ல.
உண்மையைச் சொன்னால், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் தவறான நடைமுறைகள் ஆரம்பித்தது பாஜக கூட்டணி ஆட்சியில் தான். அவர்கள் தான் 'முதலில் வருபவர்களுக்கு முதலில்' ("first come, first served" policy ) என்ற கொள்கையை ஆரம்பித்து, அதை நடைமுறைப்படுத்தியவர்கள்.
இந்த உண்மைகளை எல்லாம் நாங்கள் வெளிப்படுத்துவோம் என்று பயந்து தான், நாடாளுமன்றத்தை நடத்தவிடாமல் பாஜக முடக்கியது.
தணிக்கைத் துறையைப் பொறுத்தவரை அவர்கள் தங்களுக்குத் தாங்கள் அநீதியை செய்து கொண்டுள்ளனர். பாஜகவும் எதிர்க் கட்சிகளும் மக்களுக்கு அநீதியைச் செய்கின்றன என்றார்.
2010ம் ஆண்டு 3ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் மூலம் கிடைத்த வருமானத்துடன் 2007-08ம் ஆண்டில் 2ஜி ஸ்பெக்ட்ரம் மூலம் கிடைத்த வருமானத்தை ஒப்பிட்டு நாட்டுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாக கணக்குக் தணிக்கை அதிகாரி அறிக்கை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications