தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையிலான போர் இது-சாமித்தோப்பில் ஜெ. பேச்சு

சட்டசபைத் தேர்தல் வருவதையொட்டி ஒவ்வொரு சமூகத்தினர், ஜாதியினரின் ஆதரவையும் பெறும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார் ஜெயலலிதா.
அந்தவகையில் சமீபத்தில் கன்னியாகுமரி மாவட்டம் அருமனைக்குச் சென்று அங்கு நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்டு கிறிஸ்தவர்களுக்கு மூன்று உறுதிமொழிகளை அளித்து விட்டு வந்தார்.
தற்போது இன்னொரு சமூகத்தினரின் ஆதரவைப் பெறும்வகையில், அதே கன்னியாகுமரி மாவட்டம் சாமித்தோப்பில் உள்ள அய்யா வைகுண்ட சாமி தலைமைப் பதிக்கு இன்று சென்றார் ஜெயலலிதா.
இதற்காக சென்னையிலிருந்து தனி விமானத்தில் புறப்பட்டு, தூத்துக்குடி வந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்குச் சென்றார். பின்னர் கார் மூலம் அவர் சாமித்தோப்பை அடைந்தார். வழியெங்கும் ஜெயலலிதாவுக்கு பெரும் திரளான அதிமுகவினர் வரவேற்பு அளித்தனர்.
பின்னர் அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதிக்கு வந்த ஜெயலலிதா, வடக்குவாசல் பகுதியில் காரிலிருந்து இறங்கி, வடக்குவாசல் வழியாக பதிக்குள் நுழைந்து, பள்ளியறை சென்று அங்கு நடைபெறும் வழிபாட்டில் பங்கேற்றார்.
அதை முடித்துக் கொண்ட பின்னர், கிழக்கு வாசல் வழியாக வெளியேவந்து பதியின் கிழக்குப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விழா மேடைக்கு சென்றார். அங்கு பல்வேறு நல உதவிகளை வழங்கினார். விழாவுக்கு, பாலபிரஜாபதி அடிகளார் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியின்போது ஜெயலலிதா பேசுகையில், தற்போது தமிழகத்தில் நல்ல சக்திக்கும், தீய ச்திக்கும் இடையே போர் நடந்து வருகிறது. தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையிலான போர் இது. இதில் தர்மம் வெல்லும். அய்யா வைகுண்டசாமியின் அருளால் அதிமுக ஆட்சி நடந்தால் தமிழக மக்களுக்கு நல்லது நடக்கும் என்று பேசினார்.












Click it and Unblock the Notifications