போதைப் பொருள் கடத்தலில் பேராசிரியர் உள்பட 4 பேர் கைது
நெல்லை: நெல்லையின் பல பகுதிகளில் வயது வித்தியாசமின்றி மாணவர்கள் உட்பட பலருக்கும் போதைப் பொருள் மற்றும் போதை ஊசிகளை சப்ளை செய்து வந்த கும்பலைச் சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பாளையங்கோட்டை பகுதியில் காரில் வைத்து போதைப் பொருளை சப்ளை செய்வதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதன் பேரில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 4 பேர் கொண்ட கும்பல் சிக்கியது.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் நெல்லையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றின் பேராசிரியராவார். மேலும் இவர் நெல்லையைச் சேர்ந்த பிரபல பஸ் கம்பெனி உரிமையாளரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு நாகர்கோவிலில் இருந்து போதை பொருள் சப்ளை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்களிடம் இருந்து அபின், லூபிக், பெனர்கான் உள்ளிட்ட ஏராளமான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் யாருக்கெல்லாம் தொடர்புள்ளது என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications