தமிழக போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ. 7000 முன்பணம்

ஊதிய உயர்வு, அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி, நகர ஈட்டுப்படி உள்ளிட்டவை குறித்து தமிழக அரசுடன் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமான தொழிலாளர் முன்னேற்ற சங்கம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதன் ஒருகட்டமாக, தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதன் இறுதியில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதில், சம்பள முரண்பாட்டைச் சரிசெய்தல், ஊதிய உயர்வு பலன் ஓய்வூதியதாரர்களுக்கு அளித்தல், படிகளில் உயர்வு, ஊதிய உயர்வினால் வருங்கால வைப்பு நிதி நிர்வாக பங்கு கூடுதல் ஆகிய அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்புகளை அமல்படுத்துவது குறித்து புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்டது.
போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டதன் அடிப்படையில் பணப்பலனின் ஒரு பகுதியாக ஒரு தொழிலாளருக்கு ரூ. 7 ஆயிரம் வீதம் அனைத்துத் தகுதியுள்ள பணியாளர்களுக்கும் ஜனவரி 10-ம் தேதி வழங்கப்படும்.
ஓய்வூதியம் சீரமைத்தல், பணியாளர்களுக்கு பதவி உயர்வு, சம்பள விகிதத்தினை முறைப்படுத்துதல், விருப்பார்ந்த ஓய்வு நிபந்தனைகளை தளர்த்தி பரிசீலித்தல் மற்றும் பணியாளர் விகிதத்தை மாற்றியமைத்தல் போன்றவற்றுக்கு அரசு நிலையில் அதிகாரிகள் மற்றும் தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பேரவையின் பிரதிநிதிகள் உள்ளடக்கிய குழு அமைத்து பரிசீலிக்கும்.
ஜனவரி 25-ம் தேதிக்குள் பரிந்துரை செய்யப்பட்டு நடைமுறைப்படுத்த ஆவன செய்யப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications