தமிழக அரசை கண்டித்து 11ல் சேலத்தில் பால் உற்பத்தியாளர்கள் கண்டன உண்ணாவிரதம்
சேலம்: பால் கொள்முதல் விலையை குறைத்து அறிவித்த தமிழக அரசைக் கண்டித்து பால் உற்பத்தியாளர்கள் சேலத்தில் நாளை கண்டன உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவிருக்கின்றனர்.
இது குறித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் கே. முகமது அலி, பொதுச் செயலாளர் ஏ.எம்.முனுசாமி ஆகியோர் கூட்டாக இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கடந்த 4-ம்தேதி அன்று தமிழக முதலமைச்சர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் உற்பத்தியாளர்கள் சங்கங்களின் சார்பில் பசும்பாலுக்கு ரூ. 5 ம், எருமைப்பாலுக்கு ரூ. 8 ம் கொள்முதல் விலை உயர்வு கோரினர்.இதனை முதல்வருடன் கலந்து பேசி தெரிவிப்பதாகத் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
இந்த நிலையில் கடந்த 5- ம் தேதி தமிழக அரசு தன்னிச்சையாக பசும்பாலுக்கு ரூ. 1.10 ம், எருமைப்பாலுக்கு ரூ. 2.20 ம் அறிவித்துள்ளது. அரசின் இந்த அறிவிப்பு பால் உற்பத்தியாளர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தையும், கடும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
எனவே, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கமும், பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கமும் இணைந்து தமிழக அரசை கண்டித்து ஆரம்ப சங்கங்கள் முன்பு கருப்புக் கொடி ஏற்றுவது என்றும், வரும் 11-ம் தேதி அன்று சேலம் பால் பண்ணை முன்பு மாநிலம் தழுவிய கண்டன உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications