தமிழர் வாழ்வில் தமிழ்தான் இல்லை! - காசிஆனந்தன் பேச்சு
புதுக்கோட்டை: பிற மொழிக் கலப்பின் காரணமாக தமிழர்களின் வாழ்வில் தமிழ் இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது, என்றார் ஈழத்துக் கவிஞர் காசி ஆனந்தன்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பேரூராட்சியில் நடந்த ஒரு திருமண விழாவில் கவிஞர் காசி ஆனந்தன் கலந்துகொண்டார்.
மணமக்களை வாழ்த்தி அவர் பேசுகையில், "தமிழ் மொழியை காப்பாற்றும் பொறுப்பு தமிழர்களான நமக்குத்தான் உண்டு. தமிழர்களிடம் தமிழ் இல்லை. தமிழர்களின் வாழ்வில் தமிழ் இல்லை.
தமிழர்கள் பேசும் வார்த்தையிலும் தமிழ் இல்லை. மொழி அழிந்தால் அந்த இனம் அழியும் என்பதை மறந்துபோயிருக்கிறோம்.
சென்னையில் நடந்த ஒரு நூல் வெளீயிட்டு விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதி தமிழ் அழிந்து வருகிறது காப்பாற்றப்பட வேண்டும் என்றார். ஆனால் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆங்கிலம் கற்பிக்கப்படவேண்டும் என்கிறார்.
சீனாவில் ஆங்கில கலப்பு இருக்கக்கூடாது என்றும், அப்படிக் கலந்தால் தண்டனை என்றும் சட்டமே இருக்கிறது. அதனால் அங்கு மொழி காக்கப்படுகிறது.
இதே போல் தமிழ்நாட்டிலும் கலப்பில்லா தமிழ் மொழிக்கு சட்டம் கொண்டு வரவேண்டும். அப்போதுதான் மொழியும் இனமும் காக்கப்படும்.
ஆங்கில மொழியை தெய்வமாக்கி கோவில் கட்டும் முயற்சியை தமிழ்நாட்டில் சில தொடங்கியிருக்கின்றனர். இதுவா நாகரிகம்?
சமஸ்கிருதம் செத்த மொழி. தமிழ் செத்துக்கொண்டிருக்கும் மொழி. சமஸ்கிருதத்தை அடியோடு எதிர்த்த சுந்தரனார் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் அவரையும் அறியாமல் வடமொழி கலப்பு வந்தது எப்படி?
பொங்கல் நாளில் வீட்டு வாசலில் போடும் கோலத்தில் கூட ஹேப்பி பொங்கல் என்றுதான் எழுதுகின்றனர்.
நேதாஜியை படித்துத்தான் பிரபாகரன் விடுதலை போரை தொடங்கினார். 2 லட்சம் தமிழர்கள் ஈழப்போருக்காக உயிர் துறந்திருக்கிறார்கள். வெள்ளைக்காரன் கூட இப்படி குண்டு மழை பொழிந்திருக்க மாட்டான். ஆனால் உலகம் அத்தனையும் வேடிக்கை பார்த்துக் கொண்டுதானிருக்கிறது..," என்றார்.












Click it and Unblock the Notifications