தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கத்தில் ஒரே நேரத்தில் தேர்தல்-ஆணையம்

தேர்தலில் சீர் திருத்தங்கள் கொண்டு வருவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கொல்கத்தாவில் நடந்தது. மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. கூட்டத்தில் பேசிய குரேஷி கூறுகையில்,
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேங்கு வங்காளம் மற்றும் அஸ்ஸாம் ஆகிய 5 மாநிலங்களுக்கும் ஒரே நேரத்தில் சட்டசபைத் தேர்தல் நடத்தப்படும். இந்த 5 மாநிலங்களின் தேர்தல் முடிவுகளும் ஒரே நேரத்தில் அறிவிக்கப்படும்.
தேர்தலுக்கு 48 மணி நேரத்துக்கு முன் அரசியல் கட்சிகள் தங்கள் கட்சிகளின் சார்பில் வாக்காளர் சீட்டுகள் கொடுக்கின்றன. அப்போது அன்பளிப்புகளும், பணமும் கூட கொடுக்கப்படுகின்றன. இதைத் தடுக்க தேர்தல் கமிஷனே பொது மக்களுக்கு தேர்தல் கமிஷனின் சின்னம் பொறிக்கப்பட்ட வாக்காளர் சீட்டு கொடுக்க முடிவு செய்துள்ளது.
பிகாரில் சட்டசபை தேர்தல் நடந்தபோது, இதுபோன்ற தேர்தல் கமிஷனின் சின்னம் பொறிக்கப்பட்ட வாக்காளர் சீட்டு வழங்கப்பட்டது. அதே போல இந்த மாநிலங்களிலும் வழங்கப்படும்.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளுக்கு தேர்தல் கமிஷன் ஏற்கனவே தடை விதித்துள்ளது. அதேபோல தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளுக்கும் தடை விதிப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும்போதே இந்த கருத்துக் கணிப்புக்கும் தடை விதிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்.
இந்தியாவில் 1,200 அரசியல் கட்சிகள் உள்ளன. அவற்றில் 150 கட்சிகள்தான் செயல்படுகின்றன. மீதி உள்ள கட்சிகளில் பெரும்பாலானவை போலி கட்சிகள். இந்தக் கட்சிகளின் அங்கீரத்தை ரத்து செய்யும் அதிகாரம் தேர்தல் கமிஷனுக்கு வேண்டும்.
தேர்தலின்போது பணம் விளையாடுவதை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுத்தாக வேண்டும். அதேபோல கிரிமினல் குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிடுவதை தடுத்தாக வேண்டும். தேர்தலில் முறைகேடு செய்யும் வேட்பாளர்கள் 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டு வருகிறது. இந்த தண்டனை காலத்தை 5 ஆண்டுகளாக உயர்த்த வேண்டும்.
வேட்பாளர்களுக்கு அரசாங்கமே தேர்தல் செலவுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது. தேர்தல் கமிஷனுக்கு இதில் உடன்பாடு இல்லை. இதை தேர்தல் கமிஷன் எதிர்க்கிறது. வேட்பாளர்களுக்கு அரசே செலவு செய்ய பணம் கொடுத்தால், அரசியல் கட்சிகள் மேலும் பணம் பெற்று, அதிக அளவில் முறைகேடுகளில் ஈடுபட உதவியது போலாகி விடும் என்றார் குரேஷி.
பின்னர் நிருபர்களிடம் பேசிய குரேஷி, மேற்கு வங்க மாநிலத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு நிலைமை கவலை அளிக்கிறது. குறிப்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகள் ஆயுத முகாம்கள் அமைத்து செயல்படுவது குறித்து எதிர்க்கட்சிகள் தேர்தல் கமிஷனின் கவனத்துக்கு கொண்டு வந்தன.
அது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து வருகிறோம். தீவிர சோதனைகள் நடத்தி ஆயுதங்களையும், கள்ளச் சாராயத்தையும் பறிமுதல் செய்யுமாறும், ஆயுத முகாம்களை அழிக்குமாறும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பித்து சமூக விரோதிகளை கைது செய்யும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications