லைசென்ஸ் இல்லாத கைத்துப்பாக்கியுடன் சுற்றிய மாஜி எம்.எல்.ஏ. மகனுக்கு காப்பு
மதுரை: லைசென்ஸ் இல்லாத துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த பார்வர்டு பிளாக் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தவமணியின் மகன் ஆண்டவர் என்பவர் கைது செய்யப்பட்டார்.
பார்வர்ட் பிளாக் கட்சியின் சேடப்பட்டி சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ- வாக இருந்தவர் தவமணி. இவரது மகன் ஆண்டவர் (49). இவர் மதுரை மாவட்டம் பேரையூர் கல்லுப்பட்டியில் வசித்து வருகின்றார்.
தேனி மாவட்டம் மயிலாடும்பாறை அருகே பேச்சியம்மன் கோவில்பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு ஆண்டவர் வந்துள்ளார். அங்கிருந்து மயிலாடும்பாறை சென்று மது அருந்திய நிலையில் சென்றுள்ளார்.
அப்போது அப்பகுதியில் நக்சலைட் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த போலீசார் சந்தேகத்தின் பேரில் ஆண்டவரிடம் விசாரணை நடத்தினர்.
போலீஸ் விசாரணையின் போது முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் அவரை சோதனை செய்தனர். அப்போது அவரது இடுப்பில் லைசென்ஸ் இல்லாத கைத்துப்பாக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து அவரிடம் இருந்த கைத்துப்பாக்கியை பறிமுதல் செய்ததோடு அவரை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications