பாளை சிறையில் ஆயுள் தண்டனை கைதி சாவு-மாஜிஸ்திரேட் விசாரணை
நெல்லை: பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதி இறந்தது தொடர்பாக கைதிகள், சிறை காவலர்களிடம் நேற்று மாஜிஸ்திரேட் 5 மணி நேரம் விசாரணை நடத்தினார்.
குமரி மாவட்டம் கல்குளம் அருகேயுள்ள வீரவிலையைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் என்ற ஆசி. ஆயுள்தண்டனை கைதியான அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
நேற்று முன்தினம் மாலை அவர் மீது போர்வையை போர்த்தி கைதிகள் சிலர் சரமாரியாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் மயங்கி விழுந்த அவரை சிறை காவலர்கள் மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சுப்பிரமணியன் வழியிலேயே இறந்தார். அவரது உடலில் பல்வேறு இடங்களில் காயம் இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பெருமாள்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுப்பிரமணியன் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உள்சிறையில் உள்ள கைதிகள் 500 பேர் நேற்று முன்தினம் இரவு மற்றும் நேற்று காலை உண்ணாவிரதம் இருந்தனர். நேற்று காலை 11 மணிக்கு சிறைக்கு வந்த மாஜிஸ்திரேட் ராஜேந்திர கண்ணா சிறை காவலர்கள், கைதிகள் மற்றும் இறந்த கைதியின் உறவினர்களிடம் 5 மணி நேரம் விசாரணை நடத்தினார்.
அப்போது கைதிகள் டாக்டர் சரியான நேரத்தில் சிகிச்சை அளித்திருந்தால் அவரை காப்பாற்றி இருக்கலாம், அவரது சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கிடையே சிறை கண்காணிப்பாளர் ஆனந்தன் கைதிகளை சமாதானப்படுத்தினார்.
இதனால் கைதிகள் நேற்று மதியம் உணவை சாப்பிட்டனர். மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் சுப்பிரமணியன் சாவு குறித்து உண்மை நிலவரம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications