பாளையங்கோட்டையில் ஒரே நாளில் 8 அரசு பஸ்கள் ஜப்தி: கோர்ட் அதிரடி
நெல்லை: விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காததால் ஒரே நாளில் நெல்லையில் அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான 8 பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டன.
சிவகாசியில் இருந்து நாகர்கோவிலுக்கு கடந்த 2009-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1-ம் தேதி வளைகாப்பு நிகழ்ச்சிக்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 25 பேர் வேனில் சென்றனர். செங்குளம் ரயில் நிலையம் அருகே வேன் மீது நாகர்கோவிலில் இருந்து நெல்லை வந்த அரசுப் பேருந்து மோதியது.
இந்த விபத்தில் சிவகாசியைச் சேர்ந்த ராமசந்திரன், கணேசன் மனைவி மாரித்தாய் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 23 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களது குடும்பத்தினர் வக்கீல் அமலன் மூலம் இழப்பீடு கேட்டு 2வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.
ஆனால் இழப்பீடு வழங்காமல் அரசு போக்குவரத்துக் கழகம் காலம் தாழ்த்தி வந்தது. இதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிபதி பிரபுதாஸ், அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான 25 பேருந்துகளை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். இதன்படி பாளை புதிய பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த 8 பேருந்துகளை நீதிமன்ற ஊழியர்கள் நேற்று ஜப்தி செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications