சுவிஸில் விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் 10 பேர் கைது!
பெர்ன்: சுவிட்ஸர்லாந்தில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமான பண பரிவர்த்தனைகள் மற்றும் குற்றக் குழுக்களின் உறுப்பினர்கள் என்கிற குற்றசாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள இவர்கள் அனைவரும் இன்று நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
சுவிஸ் முழுவதும் 20 இடங்களில் தேடுதல் வேட்டைகள் நடத்தி இவர்களை கைது செய்ததாக அந்நாட்டு குற்றவியல் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த கைதுகளுக்கான புலனாய்வு நடவடிக்கைகள் 18 மாதங்களுக்கு முன்னர் தொடங்கி விட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
கைது செய்யப்பட்டிருப்பவர்கள், சுவிட்ஸர்லாந்து நாட்டில் வாழும் மற்ற தமிழர்களை விடுதலைப்புலிகளுக்கு நிதியுதவி அளிக்கும்படி மிரட்டினர் என்று நாட்டின் தலைமை அரசு வழக்கறிஞர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிட்ஸர்லாந்து அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளவர்கள், அங்குள்ள தமது நாட்டைச் சேர்ந்த தமிழர்களை பெருந்தொகையான பணத்தை கடனாகப் பெற்று தம்மிடம் கொடுக்கும்படி மிரட்டியும், அச்சுறுத்தியும் பணிய வைத்தனர் என்று அரச தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை பல ஆண்டுகள் இடம் பெற்றன என்றும், அது அவர்களுக்கு பல மில்லியன் டாலர்களை ஈட்டிக் கொடுத்தது என்றும் அரச வழக்கறிஞர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். சுவிட்ஸர்லாந்தில் சுமார் 40,000 தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலோர் ஈழத் தமிழர்களே.
இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் முன்வந்து சாட்சியம் அளிக்கும் வகையில் ஒரு சிறப்பு தொலைபேசி வசதியையும் சுவிட்ஸர்லாந்து அதிகாரிகள் ஏற்படுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications