திண்டுக்கல் அருகே மணல் கடத்திய திமுக பிரமுகர் லாரிகளை பிடித்த பொதுமக்கள்
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே திமுக பிரமுகருக்கு சொந்தமான லாரியில் மணல் கடத்தியபோது அதை பொது மக்கள் மடக்கிப் பிடித்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா கோவிலூர் அருகே உள்ளது ரெட்டியபட்டி. இங்கு வசிப்பவர் திமுக பிரமுகர் வி. சி. ராஜேந்திரன்.
கோவிலூர் அருகேயுள்ள ஆர்.கோம்பை ஊராட்சிக்கு உட்பட்ட ரெட்டிய பட்டி கிராமம் அருகில் மணலூர் காட்டில் திமுக பிரமுகர் வி.சி.ராஜேந்திரன் லாரி லாரியாக மணலை அள்ளி வெளியூரில் வியாபாரம் செய்து வருகிறார்.
இது குறித்து கிராம மக்கள் பல முறை மாவட்ட கலெக்டரிம் புகார் கொடுத்தும் பலனில்லை என்று கூறப்படுகின்றது.
இந்த நிலையில் ராஜேந்திரனுக்கு சொந்தமான இரண்டு லாரிகளில் மணல் கடத்திச் செல்லும் போது அதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் கிராம மக்கள் மடக்கிப் பிடித்தனர்.
இதனால் மணல் கடத்தி வந்த லாரிகளை அங்கேயே விட்டுவிட்டு லாரி டிரைவர்கள் ஓட்டம் பிடித்தனர்.
இதே போன்று அருகில் உள்ள மற்றொரு பகுதியில் மணல் கடத்திச் சென்று கொண்டிருந்த லாரியையும் மக்கள் விரட்டிச் சென்றனர். அவர்களும் லாரியை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றனர்.
இதற்கிடையே லாரி பிடிபட்டது பற்றி கேள்விபட்ட ராஜேந்திரன் மற்றும் அவரது சகோதரர் செல்வம் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று கிராம மக்களை மிரட்டியதாக கூறப்படுகின்றது.
மணல் கொள்ளையில் ஈடுபட்ட வி.சி.ராஜேந்திரன் மீது 30 -க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் கொலை வழக்குகளும் அடங்கும். சமீபத்தில் கூட குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications