பிப்.3ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்-கூட்டணி குறித்து முடிவு

விடிந்தால் கல்யாணம் என்பது போல எப்போது வேண்டுமானாலும் சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் நிலை தமிழகத்தில் உள்ளது. தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்த தயாராகி விட்டது. அரசியல் கட்சிகளும் அதற்கேற்ற வகையில் தயாராகி வருகின்றன.
முக்கிய கட்சிகளான திமுகவும், அதிமுகவும் கூட்டணியை இறுதி செய்யும் கடைசி நேர வேலைகளில் மும்முரமாக உள்ளன.
திமுக கூட்டணியில் பாமக இணையலாம் என்று கூறப்படும் நிலையில் , திமுக தனது பொதுக்குழுவைக் கூட்டியுள்ளது. இக் கூட்டத்தில் பாமகவை கூட்டணியில் சேர்ப்பது குறித்து முடிவெடுக்கப்படவுள்ளது.
இந்நிலையில் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் 3.2.2011 வியாழக்கிழமை காலை 10 மணியளவில் தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெறும். அப்போது பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில் கூட்டணி குறித்தும், திமுக எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது, கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகளை விட்டுத் தருவது என்பது குறித்து இறுதி செய்யப்படவுள்ளதாக தெரிகிறது.
இக்கூட்டத்திற்குப் பின்னர் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை திமுக தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications