நெல்லையின் பிரபல அல்வாக் கடையில் ஐடி ரெய்டு-கட்டுக் கட்டாக பணம் பறிமுதல்

அல்வாவுக்குப் பெயர் போனது நெல்லை. அதிலும் நெல்லை சந்திப்புப் பகுதியில் நூற்றுக்கணக்கான அல்வாக் கடைகள் உள்ளன. அதில் பிரபலமான ஒன்று சாந்தி ஸ்வீட்ஸ் என்கிற கடை. பார்க்க மிகச் சிறியதாகஇருந்தாலும் மிகவும் பிசியாக இருக்கக் கூடிய கடை இது.
இந்த கடையில் நேற்று இரவு திடீரென வருமான வரித்துறையினர் புகுந்து அதிரடி ரெய்டில் இறங்கினர். விடிய விடிய இந்த சோதனை நடந்தது.
விற்பனை படு சூடாக இருந்த சமயம் பார்த்து, மதுரை வருமான வரித்துறை துணை இயக்குனர் மருது பாண்டி தலைமையிலான அதிகாரிகள் குழு இரவு 7 மணிக்கு உள்ளே புகுந்து சோதனையை தொடங்கினர். விற்பனையை நிறுத்த உத்தரவிட்ட அதிகாரிகள், கடை ஊழியர்களை வெளியேறக் கூடாது என்று தடை போட்டு விட்டு சோதனையில் குதித்தனர்.
கடையின் உரிமையாளர், ஊழியர்களிடமும் விசாரணை நடந்தது. இதேபோல கடை உரிமையாளரின் வீடு, அல்வா குடோன் உள்ளிட்ட இடங்களிலும் ரெய்டு நடத்தப்பட்டது.
இந்த ரெய்டின்போது, கட்டுக் கட்டாக பணம் சிக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வருமானவரித்துறை சார்பில் அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.
சாந்தி ஸ்வீட்ஸ் கடையில் நடந்த இந்த அதிரடி ரெய்டு நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications