சென்னையில் காணும் பொங்கல்-கடற்கரையில் மக்கள் வெள்ளம்
சென்னை : பொங்கல் திருநாளின் கடைசி நாள் நிகழ்ச்சியான காணும் பொங்கல் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி சுற்றுலாத் தலங்கள், நீர் நிலைகள், விலங்கியல் பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களில் மக்கள் குவிந்தனர். சென்னை கடற்கரையில் மக்கள் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
பொங்கல் திருநாள், போகி, தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல் என்றுதான் வழக்கத்தில் உள்ளது. இருப்பினும் காணும் பொங்கல் என்று கடைசியாக ஒரு நாள் கொண்டாடுவது இப்போது வழக்கமாகியுள்ளது. தமிழகத்தின் வட மாவட்டங்களில்தான் காணும் பொங்கல் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.
இன்றைய தினத்தில் குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் சென்று நண்பர்கள், உறவினர்களைச் சந்தித்து மகிழ்வதும், வெளியிடங்களுக்குச் சுற்றுலா செல்வதும் வழக்கமாக உள்ளது.
தென் மாவட்டங்களில் இந்த தினத்தை கனுப் பொங்கல் என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். இந்த நாளில் சகோதரிகளுக்கு, சகோதரர்கள் சீர் கொடுப்பது சம்பிரதாயம். திருமணமான, திருமணமாகாத சகோதரிகளுக்கு உடன் பிறந்தவர்கள் தங்களால் இயன்ற பொருட்களை வாங்கித் தந்து அவர்களின் வளமான வாழ்க்கைக்கு ஆசிர்வாதம் செய்வது வழக்கம்.
இன்று காணும் பொங்கல். இதையொட்டி தமிழகம் முழுவதும் உற்சாகப் பெருக்கில் மூழ்கியது.
சென்னையில் மெரீனா கடற்கரையில் மக்கள் கூட்டம் அலை மோதியது. கட்டுச் சோறு கட்டிக் கொண்டு குடும்பம் குடும்பமாக கடற்கரையில் மக்கள் குவிந்தனர் மக்கள். உற்றார், உறவினர், நண்பர் புடை சூழ கடற்கரைக்கு வந்ததால் கடற்கரை முழுவதும் மக்கள் மயமாகக் காணப்பட்டது.
காணும் பொங்கலையொட்டி லட்சக்கணக்கில் மக்கள் கூடுவார்கள் என்பதால் யாரும் கடலில் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. தடுப்புக் கட்டைகள் கட்டப்பட்டு போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
குதிரைப் படை போலீஸார் ரோந்து சுற்றி வந்தனர். போதிய அளவிலான போலீஸாரும், அவசர தேவைக்காக ஆம்புலன்ஸ்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. காமராஜர் சாலை உள்ளிட்ட அக்கம் பக்கத்து சாலைகளில் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டிருந்தது.
இதேபோல பெசன்ட் நகரில் உள்ள கடற்கரை, விஜிபி தீம் பார்க், முட்டுக்காடு, மகாபலிபுரம் உள்ளிட்ட இடங்களிலும் மக்கள் கூட்டமாக இருந்தது. அதேபோல வேடந்தாங்கலுக்கும் மக்கள் படையெடுத்தனர். வண்டலூரில் உள்ள விலங்கியல் பூங்காவுக்கும் மக்கள் கூட்டம் மொய்த்தது.
திருச்சி அருகே உள்ள முக்கொம்பிலும் மக்கள் குவி்ந்தனர். அதேபோல கன்னியாகுமரியிலும் மக்கள் குவிந்தனர். தமிழகத்தின் அனைத்து சுற்றுலாத் தளங்களிலும் மக்கள் கூட்டம் அலை மோதியது.












Click it and Unblock the Notifications