அடையாறு சுற்றுச்சூழல் பூங்காவுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி-22ம் தேதி திறப்பு
சென்னை: சென்னை அடையாறு சுற்றுச்சூழல் பூங்காவுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை ஒரு வழியாக அனுமதி அளித்துவிட்டது. இதையடுத்து இந்தப் பூங்காவை வரும் 22ம் தேதி முதல்வர் கருணாநிதி திறந்து வைக்கவுள்ளார்.
சென்னை அடையாறில் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதியில் பூங்கா தமிழக அரசு சுற்றுச்சூழல் பூங்காவை அமைத்துள்ளது.
58 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள இந்தச் சுற்றுச்சூழல் பூங்காவை தமிழ்நாடு கடற்கரை மணடல மேம்பாட்டுக் குழுமம் அமைத்தது.
சென்னையில் ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்கத்தை உணர்ந்து அடையாறு ஓடை மற்றும் முகத்துவாரத்தை மறுசீரமைக்கும் வகையில் ரூ.100 கோடியில் இந்தப் பூங்கா அமைக்கப்பட்டது.
இதற்காக கடற்கரையை ஒட்டியுள்ள இடங்கள் சீர்செய்யப்பட்டு மரம், செடிகள் நடப்பட்டன. சிறு பாலங்கள், நடைபாதைகள், மூலிகை செடிகள் போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன. துணை முதல்வர் ஸ்டாலினின் தான் இந்தப் பூங்காவை அமைக்க முதல் முயற்சி எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
2008ம் ஆண்டு தொடங்கிய இந்தப் பணி சமீபத்தில் முடிவடைந்தது. இதையடுத்து இந்தப் பூங்காவை பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 3ம் திறந்து வைப்பதாக இருந்தது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்தன.
இந் நிலையில் இந்தப் பூங்காவுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் திமுக-காங்கிரஸ் இடையே மோதல் நடந்த நிலையில் முதல்வர் கருணாநிதியுடன் விழாவில் பிரதமர் கலந்து கொள்ளாமல் தவிர்க்கவே பூங்காவுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி தராமல் இழுத்ததடித்தாகவும் பேச்சு எழுந்தது.
அதை உறுதி செய்வது போல இன்னொரு நிகழ்ச்சியில் பங்கேற்ற வந்த பிரதமரை முதல்வர் கருணாநிதி வரவேற்கச் செல்லாமல் தவிர்த்தார்.
இதையடுத்து பல மத்திய அமைச்சர்களும் முதல்வர் கருணாநிதியை அடுத்தடுத்து சந்தித்தனர். மேலும் மத்திய சுற்றுச்சூழல் துறையைச் சேர்ந்த 3 நபர் கொண்ட குழு அடையார் பூங்காவை ஆய்வு செய்தது. கடந்த 11ம் தேதி நடந்த ஆய்வுக்குப் பின் பூங்காவை திறக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பூங்காவை முதல்வர் கருணாநிதி வரும் 22ம் தேதி திறந்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications