ரங்கசாமியுடன் காங். தலைவர்கள் பேச்சு தோல்வி: இன்று ராஜினாமா?
புதுச்சேரி: புதுவை முன்னாள் முதல்வர் ரங்கசாமி தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளதையடுத்து அவருடன் அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
ரங்கசாமி புதுவை மாநில முதல்வராக இருக்கையில் அவர் மீது அதிருப்தி அடைந்த எம்.எல்.ஏ.க்களும், அமைச்சர்களும் ஒன்றாகச் சேர்ந்து டெல்லி சென்று கட்சி மேலிடத்தில் புகார் செய்தனர். அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
கட்சி மேலிடமும் அவரை முதல்வர் பதவியில் இருந்து தூக்கியது. இதையடுத்து அமைச்சர் வைத்திலிங்கம் முதல்வரானார்.
பின்னர் ரங்கசாமி ஆதரவாளர்கள் சிலருக்கு பதவி பறிபோனது. மேலும், அவர்கள் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டனர். அவ்வாறு நீக்கப்பட்டவர்கள் ரங்கசாமியை தனிக் கட்சி துவங்குமாறு வலியுறுத்தினர். அவர்கள் கோரிக்கையை ஏற்று ரங்கசாமி புதுக் கட்சி துவங்க முடிவெடுத்துள்ளார். அதற்காக தனது எம்.எல். ஏ. பதவியை ராஜினாமா செய்கிறார்.
இந்நிலையில் ரங்கசாமியை சந்தித்து அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் ரங்கசாமி தனது முடிவில் உறுதியாக இருப்பதால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. அவர் இன்று பிற்பகலில் சபாநாயகரைச் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுக்கவிருப்பதாக தகவல்கள் வருகின்றன.












Click it and Unblock the Notifications