சேலத்தி்ல் மாஜி திமுக எம்.எல்.ஏ, பினாமி மீது நில ஆக்கிரமிப்பு புகார்
சேலம்: சேலத்தில் வெள்ளிநகை வியாபாரிக்கு சொந்தமான ரூ. 1.50 கோடி மதிப்புள்ள நிலத்தை தி.மு.க. பிரமுகர்கள் மிரட்டி அபகரிக்க முயற்சி செய்வதாக சேலம் போலீஸ் கமிஷனர் சுனில்குமார் சிங்கிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் செவ்வாய்ப்பேட்டை மாணிக்கம் தெருவைச் சேர்ந்தவர் வெள்ளி நகை தொழிலதிபர் அமர்நாத். இவரது மனைவி சாந்தி மற்றும் சகோதரர்கள் மோதிலால், ராஜன் ஆகியோருக்கு நேஷனல் ஓட்டல் அருகில் உள்ள லஷ்மி நகரில், 3,340 சதுரடி காலி நிலம் உள்ளது. (இதன் தற்போதைய சந்தை மதிப்பு 1.50 கோடி ரூபாய் என்று கூறப்படுகின்றது).
திமுகவைச் சேர்ந்த வெங்கடாசலம் என்பவர் இந்த இடத்தில் உள்ள காம்பவுண்டு சுவர் நுழைவாயில் பூட்டை உடைத்து அத்துமீறி இரும்பு கூரை அமைத்துள்ளதை கண்டு அமர்நாத் அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து அமர்நாத் தரப்பு செவ்வாய்ப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தது. ஆனால் போலீசார் இது குறித்து முறையான நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த நிலையில் அமர்நாத், அவரது மனைவி சாந்தி, தாயார் சரஸ்வதி, சகோதரர்கள் மோதிலால், ராஜன் ஆகியோர் சேலம் போலீஸ் கமிஷனர் சுனில்குமார் சிங்கிடம் தங்களது குடும்ப நிலத்தை மீட்டுத் தருமாறு புகார் அளித்தனர்.
தி.மு.க. மாவட்ட துணை செயலரும், பனமரத்துப்பட்டி, முன்னாள் எம்.எல்.ஏ-வுமான சிவலிங்கத்தின் பினாமியாக செயல்பட்டு வருபவர் வெங்கடாசலம் என்பது குறிப்பிடத்தக்கது.
நில ஆக்கிரமிப்பு விவகாரத்தில் தி.மு.க. மாஜி எம்.எல்.ஏ. சிவலிங்கம் உள்ளிட்டோர் மீது வெள்ளி நகை தொழிலதிபர் புகார் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications