பெட்ரோல் விலை உயர்வு-டீஸல் கார்களுக்கு கூடுது மவுசு!

பெட்ரோல் விலையை விட டீஸல் விலை இன்றைய தேதிக்கு ரூ 20 குறைவு. காரணம், பெட்ரோல் விலையை உயர்த்தும் அதிகாரம் இப்போது எண்ணெய் நிறுவனங்கள் வசமே விடப்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஏற்ப பெட்ரோல் விலையை தொடர்ந்து உயர்த்தி வருகிறார்கள்.
ஆனால் டீஸல் விலையை தீர்மானிக்கும் அதிகாரம் இன்னமும் அரசிடமே உள்ளது. டீஸல் விலை உயர்வு பணவீக்கத்தை உச்சத்துக்கு கொண்டு போய்விடும் என்ற அச்சம் உள்ளதால், இதனை தள்ளிப் போட்டு வருகிறது அரசு.
இதனால் பெட்ரோல் விலைக்கும் டீஸல் விலைக்கும் பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது. இது, டீஸல் கார்களின் விற்பனைக்கு பெரிதும் உதவியாக உள்ளது.
கடந்த 2006-ம் ஆண்டு 23 சதவீதமாக இருந்த டீஸல் கார்களின் விற்பனை, இப்போது 28 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இதன் விளைவாக, சிறிய ரக கார்களிலும் டீஸல் எஞ்ஜின் மாடல்களை அதிகம் விட ஆரம்பித்துள்ளன கார் தயாரிப்பு நிறுவனங்கள். குறிப்பாக பெட்ரோல் வாகனங்களையே அதிகம் தயாரிக்கும் முன்னணி நிறுவனமான மாருதி சுஸுகி, இப்போது சிறிய ரக கார்களிலும் டீஸல் எஞ்ஜின் மாடல்களைத் தர முடிவு செய்துள்ளது.
ஹூண்டாய், நிஸ்ஸான், ஜிஎம், வோக்ஸ்வேகன் நிறுவனங்களும் டீஸல் எஞ்ஜின் மாடல்களை அதிகம் தயாரிக்கும் முயற்சியில் உள்ளன.












Click it and Unblock the Notifications