ரங்கசாமிக்கு ஆதரவாக அரசுக் கொறடா அங்காளன் விலகினார்
புதுச்சேரி: புதுச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமி ராஜினாமாவைத் தொடர்ந்து அவரது ஆரவாளரான, அரசுக் கொறடா அங்காளனும் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கடந்த 2008ம் ஆண்டு கட்சியிலிருந்து வந்த நெருக்குதலைத் தொடர்நது தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ரங்கசாமி. அதன் பின்னர் அவர் அமைதி காத்து வந்தார். ஆட்சியைக் கவிழ்க்கவோ வேறு எந்த முயற்சியிலுமோ அவர் ஈடுபடவில்லை.
இந்த நிலையில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் திடீரென வெடித்துக் கிளம்பியுள்ளார் ரங்கசாமி. நேற்று தனது மெளனம் கலைத்து சட்டசபை செயலாளரை சந்தித்து தனது எம்.எல்.ஏ. பதவி ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். காங்கிரஸ் கட்சியிலிருந்தும் விலகி விட்டார்.
அகில இந்திய என்ஆர் காங்கிரஸ்:
மேலும், அவரது வீட்டின் மேலே அகில இந்திய என்ஆர் காங்கிரஸ் என்ற பேனரும் கட்டப்பட்டது. இதுவே அவரது புதிய கட்சியாக கருதப்படுகிறது. தான் புதிய கட்சி தொடங்கப் போவதாகவும் கூறியுள்ளார் ரங்கசாமி.
இந்த நிலையில் ரங்கசாமிக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்களும் ராஜினாமா செய்ய ஆரம்பித்துள்ளனர். முதல் நபராக அரசுக் கொறடா அங்காளன் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
ராஜினாமா செய்த ரங்கசாமியை, அதிமுக மாநில செயலாளரும் எம்.எல்.ஏவுமான அன்பழகன், இன்னொரு எம்.எல்.ஏவான ஓம் சக்தி சேகர் ஆகியோர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இதன் மூலம் ரங்கசாமிக்கு அதிமுக ஆதரவும் கிடைத்துள்ளது. அதேபோல சிபிஐ கட்சியினரும் ரங்கசாமியை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
புதுவை சட்டசபையில் காங்கிரஸ் கட்சிக்கு 13 எம்.எல்.ஏக்கள் முதலில் இருந்தனர். பெரும்பான்மைக்கு 16 பேர் தேவை. இதனால் திமுகவின் 7 எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் ஆட்சி நடந்து வருகிறது. தற்போது ரங்கசாமி உள்ளிட்ட 2 பேர் விலகியுள்ளதால் காங்கிரஸின் பலம் 11 ஆக குறைந்துள்ளது. வேறு யாரும் விலகுவார்களா என்பது தெரியவில்லை. திமுகவின் ஆதரவு இருப்பதால் தற்போது 18 எம்.எல்.ஏக்களுடன் பெரும்பான்மை பலத்தில்தான் உள்ளது வைத்திலிங்கம் ஆட்சி. எனவே உடனடியாக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை. அதேசமயம், இன்னும் 3 பேர் விலகினால், முதல்வர் வைத்திலிங்கம் அரசு சிறுபான்மை அரசாக மாறும் வாய்ப்புள்ளது.
அதிமுக கூட்டணியில் இணைகிறார்:
புதிய கட்சி தொடங்கவுள்ள ரங்கசாமி அதிமுக கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் அதிமுக கூட்டணியின் முதல்வர் பதவி வேட்பாளராகவும் அவர் அறிவிக்கப்படவுள்ளார்.
ஏற்கனவே பாமகவில் 2 எம்.எல்.ஏக்கள் கட்சித் தலைமை மீது கடும் அதிருப்தியுடன் உள்ளனர். அவர்களுக்கு வரும் தேர்தலில் சீட் கிடைக்காது என்று தெரிகிறது. ஒரு வேளை சீட் தரப்படாவிட்டால், அவர்களும் ரங்கசாமியின் கீழ் அணி திரளுவார்கள் என்று தெரிகிறது.
அதேபோல காங்கிரஸ் கட்சியில் தற்போது உள்ள எம்.எல்.ஏக்களில் யாருக்கு சீட் மறுக்கப்பட்டாலும் அவர்களும் ரங்கசாமியுடன் இணையும் வாய்ப்பு உள்ளது. இதனால் ரங்கசாமியை வைத்து புதுச்சேரி அரசியலில் புதிய புயல் கிளம்பியுள்ளது.
ஆட்சியைப் பிடிக்க திட்டம்:
ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கத்தில் ரங்கசாமி இல்லை என்றும், வரும் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கும் யுக்தியுடன் அவர் களம் இறங்கியிருப்பதாகவும் கூறுகிறார்கள்.
வருகிற சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலையும் கூட ரங்கசாமி தயாரித்து வைத்து விட்டதாகவும் தெரிகிறது. கடைசி நேர மாறுதல்களைப் பொறுத்து, வேட்பாளர் பட்டியலை அவர் இறுதி செய்து முதல் ஆளாக அதை வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.
மொத்தத்தில் ரகசியமாக பல்வேறு பணிகளை முடித்து விட்ட ரங்கசாமி, தன்னை நோக்கி வருகிற ஆதரவாளர்களின் ஆதரவைப் பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை முடுக்கி விடக் காத்திருக்கிறார்.
மொத்த கோஷ்டிகளும் ஒன்று சேர்ந்து தன்னை முதல்வர் பதவியிலிருந்து அகற்றியதற்கு, சத்தமே போடாமல் புரட்சி செய்து காங்கிரஸுக்கு தக்க பாடம் கற்பிக்கும் வேகத்தில் ரங்கசாமி களம் இறங்கியிருப்பதால் புதுவை அரசியல் வட்டாரம் பரபரப்பாகியுள்ளது.












Click it and Unblock the Notifications