திருவண்ணாமலையில் அதிமுக நாளை ஆர்ப்பாட்டம் - ஜெ அறிவிப்பு!
சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலையில் நாளை அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.
இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், ஆரணி சட்டமன்றத் தொகுதியை எடுத்துக் கொண்டால், ஆரணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர், ஆரணி நகர மன்றத்தலைவர், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் உட்பட திமுக-வைச் சேர்ந்தவர்கள் ஆரணி பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாக இருந்து வரும் பையூர் ஏரியை ஆக்கிரமித்துவிட்டனர்,
நகராட்சிப்பணியாளர்களை தங்கள் சொந்தப்பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள். திமுக-வைச்சேர்ந்தவர்கள் ஆரணி டவுன் கிளப் நிர்வாகத்தில் தலையிட்டு, அதற்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். நகராட்சி சொத்துக்களை சட்டவிரோதமாக ஏலத்தில் எடுத்துள்ளனர். ரேஷன் அரிசி கடத்தல் அமோகமாக நடைபெறுகிறது என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
குடிநீர் வசதி, சாலை வசதி, தெருவிளக்கு வசதி, சுகாதார வசதி போன்ற மக்கள் நலப்பணிகள் காற்றில் பறக்க விடப்பட்டு உள்ளது. பட்டு நூல் விலை உயர்வு காரணமாக பட்டு நெசவாளர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது. மக்கள் பிரச்சினைகளை நிறைவேற்றித் தருவதிலும், விலைவாசி உயர்வைக்கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தவில்லை.
எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்ற நிலைமை தான் காணப்படுகிறது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் முன்னாள் மத்திய அமைச்சர் ராசா மூலம் இந்திய அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியதோடு, தமிழ் நாட்டிற்கு தலைக்குனிவை ஏற்படுத்தியத்தையும் கண்டித்தும் ஆரணி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதி மக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித்தர வலியுறுத்தியும், அ.தி.மு.க. திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அ.தி.மு.க.வின் சார்பில், 23.1.2011 ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 10 மணி அளவில், ஆரணி நகராட்சி அலுவலகம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்த ஆர்ப்பாட்டம் அ.தி.மு.க. தேர்தல் பிரிவு இணைச்செயலாளர் நா. பாலகங்கா, எம்.பி., தலைமையிலும், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் முக்கூர் என். சுப்பிரமணியன் முன்னிலையிலும் நடைபெறும்.
-இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications