சிவகாசி வெடிவிபத்து: பட்டாசு ஆலை போர்மேன் கைது
சிவகாசி: 8 பேர் உயிரைக் குடித்த வெடி விபத்து நடந்த பட்டாசு ஆலையின் போர்மெனைக் செய்ததனர் போலீசார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே முதலிப்பட்டி பெரியவாடியூரில் சிவகாசியை சேர்ந்த கண்ணன், விவேக், முனீஸ், சரவணன் ஆகியோருக்கு சொந்தமான ராஜ்கண்ணா பயர் ஓர்க்ஸ் என்ற பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு 35 அறைகளில் சரவெடி, பேன்சி வெடி தயாரிக்கப்படுகிறது. சுமார் 250 பேர் பணியாற்றி வருகின்றனர்.
நேற்று காலை 11 மணிக்கு ஒரு அறையில் நவின ரக பட்டாசுக்கு மணி மருந்து தயாரிக்கும் பணி நடந்துள்ளது. அப்போது ஏற்பட்ட வெடிவிபத்தில் அறையில் இருந்த இன்னாசிமுத்து, ஆறுமுகம், இன்னொரு ஆறுமுகம், குணசேகர், இனாம்ரெட்டியார் பட்டியை சேர்ந்த டேவிட் லிவிங்ஸ்டன், ஆகியோர் அதே இடத்தில் இறந்தனர்.
18 பேர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மதுரை அரசு மருத்துமனையில் சேர்க்கப்பட்ட அந்தோணி செல்வம், மாரிசாமி, சுப்புராஜ் ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். கந்தவேல், செல்வம், பெருமாள்சாமி, பஞ்சவர்ணம், மீனாட்சி, பேச்சியம்மாள், ராமர், சந்திரன், முத்தழகு, பாக்கியராஜ், பாப்பா, அமலா, பெருமாள் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த விபத்து தொடர்பாக வச்சகாரப்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
பட்டாசு ஆலை உரிமையாளர்கள் 4 பேரும் தலைமறைவாகி விட்டனர். மருந்து தயாரித்து விட்டு டீ குடிக்க சென்ற போர்மேன் காசியை போலீசார் கைது செய்தனர். இந்த ஆலையில் பட்டாசுகள், புஸ்பவணம் தயாரிக்க மட்டுமே லைசென்ஸ் பெறப்பட்டுள்ளது. ஆனால் அனுமதியின்றி பேன்சி ரக வெடிகள் தயாரிப்பு பணியில் ஈடுபட்ட போதே விபத்து ஏற்பட்டது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications