இந்திய மீனவர்களை இலங்கை கொல்வதை ஏற்க முடியாது-இந்தியா

2 வாரத்திற்குள் 2வது முறையாக தமிழக மீனவர் ஒருவரை இலங்கைக் கடற்படையினர் கொடூரமாகக் கொன்றுள்ளனர். ஜெயக்குமார் என்ற அந்த ஊனமுற்ற மீனவரை கழுத்தில் கயிற்றைப் போட்டு இறுக்கி கொடூரமான முறையில் கொன்றுள்ள செயல் அனைவரையும் பதற வைப்பதாக உள்ளது.
கடந்த 12ம்தேதிதான் மீனவர் பாண்டியன் என்பவரை சுட்டுக் கொன்றது இலங்கைக் கடற்படை. இந்த நிலையில் மீண்டும் ஒரு மீனவரைக் கொன்ற செயலால் தமிழக மீனவர்கள் கடும் அதிர்ச்சியும், கொந்தளிப்பும் அடைந்துள்ளனர்.
இதற்கு முன்பெல்லாம் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் காக்காய், குருவி போல சுட்டுக் கொன்றபோதெல்லாம் இந்திய அரசு அதிரடியாக எந்த நடவடிக்கையையும் எடுத்ததில்லை. ஆனால் தற்போது தமிழக சட்டசபைத் தேர்தல் வரவுள்ளதால், கடந்த 12ம் தேதி பாண்டின் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து படு வேகமாக செயல்பட்டது.
இலங்கைத் தூதரை நேரில் அழைத்து கண்டித்து விளக்கம் கேட்டனர். இதுபோல இனி நடக்கக் கூடாது என்று அறிவுரையும் கூறி அனுப்பி வைத்தனர். ஆனால் மறுபடியும் தங்களது கொடூர முகத்தைக் காட்டியுள்ளது இலங்கை.
இது இந்திய அரசையே சற்று கடுப்பாக்கியிருப்பதாக தெரிகிறது. மீனவர் ஜெயக்குமார் படுகொலை குறித்து மத்திய அரசு கூறுகையில், இந்த சம்பவத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளார் வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா. இதுதொடர்பாக விரிவான அறிக்கை ஒன்றை அனுப்பி வைக்குமாறு இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்திற்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவத்தை ஏற்கவே முடியாது என்று எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார். கொல்லப்பட்ட மீனவர் குறித்த முழு விவரம் மற்றும் நடந்த சம்பவம் குறித்த விவரங்களை அனுப்பி வைக்குமாறு தமிழக அரசையும் கிருஷ்ணா கேட்டுக் கொண்டுள்ளார் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த முறை மீனவர் பாண்டியன் கொல்லப்பட்டதற்கு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை இந்த மத்திய அரசு. ஒரு நிவாரண நிதியையும் கூட அது வழங்கவில்லை. இந்தநிலையில் அடுத்த மீனவரைக் கொன்று ஆணவமாக திரிகிறது இலங்கைக் கடற்படை. இருப்பினும் இந்த முறையும் உருப்படியான நடவடிக்கையை இந்தியா எடுக்கும் என்று தெரியவில்லை.












Click it and Unblock the Notifications