மத்திய அரசு செயலற்று இருப்பதே மீனவர்கள் மீதான தாக்குதல் தொடரக் காரணம்-ஜெ.

இதுகுறித்து நேற்று மாலை ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:
புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர் பாண்டியனை இலங்கை கடற்படையினர் சுட்டுக்கொன்ற சூடு தணிவதற்குள் மீண்டுமொரு தாக்குதலை இலங்கை கடற்படை நடத்தியுள்ளது மிகுந்த மனவேதனையளிப்பதோடு தமிழக மக்கள் மத்தியில் மிகுந்த பதற்றத்தையும் எற்படுத்தியுள்ளது.
22.1.2011 அன்று நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் ஒன்றியம், புஷ்பவனம் கிராமம் மீனவர் காலனியைச் சேர்ந்த கழக உறுப்பினர்கள் ஜெயக்குமார், ராஜேந்திரன் மற்றும் செந்தில் ஆகியோர் கடலுக்குள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது, இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மூவரையும் கடுமையாகத் தாக்கி கடலில் குதிக்குமாறு மிரட்டி உள்ளனர்.
இதனையடுத்து ராஜேந்திரன் மற்றும் செந்தில் ஆகியோர் கடலில் குதித்துள்ளனர். ஆனால், சுனாமி ஆழிப்பேரலையின் போது தன் கையில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக கடலில் நீச்சல் அடிக்க முடியாது என்பதால், உயிருக்கு பயந்து கடலில் குதிக்க மறுத்து தன்னைக் காப்பாற்றுமாறு இலங்கை கடற்படையிடம் கெஞ்சி இருக்கிறார் ஜெயக்குமார்.
இருப்பினும், ஈவு இரக்கமற்ற, மனிதாபிமானமற்ற இலங்கை கடற்படையினர் ஜெயக்குமாரின் கழுத்தில் கயிற்றினால் சுருக்கிட்டு இழுத்துக் கொன்றிருக்கின்றனர். பின்னர், படகில் பிரேதத்தை அப்படியே போட்டுவிட்டு இலங்கைக் கடற்படையினர் சென்றுவிட்டனர்.
இலங்கை கடற்படையினரின் கொடூரத் தாக்குதலுக்கு பலியான கழக உறுப்பினர் ஜெயக்குமாரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது என்பது தொடர்கதையாக ஆகிவிட்டது. இலங்கை அரசை இந்திய அரசு கடுமையாக எச்சரிக்காததே இதுபோன்ற அவல நிலைமைக்கு காரணம். இதுபோன்ற மனிதாபிமானமற்ற செயல்கள் இலங்கை கடற்படையினரால் இனி நடத்தப்பட்டால் இலங்கை அரசு கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்ற வகையில் மத்திய அரசின் நடவடிக்கை அமைய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications