இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் அந்நாட்டு கடற்படை இல்லையா- சரத்குமார் கேள்வி
சென்னை: பல்வேறு நடவடிக்கைகளுக்குப் பிறகும் இலங்கைக் கடற்படை தமிழக மீனவரைக் கொல்கிறது என்றால், அந்த நாட்டின் கடற்படை யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது. இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் அது இல்லையா என்று கேட்டுள்ளார் நடிகரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார்.
இதுதொடர்பாக சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கை கடற்படையினர் நேற்றிரவு புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாபட்டினத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் என்ற மீனவரின் கழுத்தில் கயிறு கட்டி கடலிலே இழுத்துச் சென்று கொலை செய்துள்ளனர். இதுபோன்ற நேரத்தில் மத்திய அரசுக்கு முதல்வர் கருணாநிதி கண்டனம் தெரிவிப்பதும் மத்திய அரசு, இலங்கை தூதரை அழைத்துப் பேசுவதும், அதற்கு ராஜபக்சே விளக்கம் அளிப்பதும் என எத்தனையோ நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
இத்தனை நடவடிக்கைகளுக்குப் பிறகும் நேற்றிரவு இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கொடூரமான முறையில் கொல்கிறார்கள் என்று சொன்னால், இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இலங்கை கடற்படை இல்லையா? என்ற கேள்விதான் எழுகிறது.
இந்திய தென் பிராந்தியத்தின் கடற்படை தளபதி முதல்வரை சந்தித்த போது தமிழக மீனவர்களை காப்பாற்றுவதற்கான நடவடிக்கை பற்றி விவாதித்துள்ளார். அப்படியிருந்தும் ஒரு சில நாட்களிலேயே இந்த சம்பவம் நடந்திருக்கிறது என்று சொன்னால் மத்திய, மாநில அரசுகள் எத்தனை நாட்களுக்குத்தான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க போகிறார்கள்?
இந்த சம்பவங்களுக்குப் பிறகாவது மத்திய அரசு, இலங்கை அரசை எச்சரித்து இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications