வைகோவுடன் புதுச்சேரி ரங்கசாமி சந்திப்பு-அதிமுக கூட்டணிக்கு வருகிறார்?
புதுச்சேரி : புதுவைக்கு வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை, முன்னாள் முதல்வரும், சமீபத்தில் காங்கிரஸிலிருந்து விலகியவருமான ரங்கசாமி நேற்று சந்தித்துப் பேசினார்.
சமீபத்தில் காங்கிரஸ் உறுப்பினர் பதவியிலிருந்தும், எம்.எல்.ஏ. பதவியிலிருந்தும் விலகினார் ரங்கசாமி. புதிய கட்சி தொடங்கப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார். அவர் அதிமுக கூட்டணியில் இணைந்து வருகிற சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. மேலும் அவரை புதுவை முதல்வர் பதவிக்கு நிறுத்த ஜெயலலிதா முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று புதுவைக்கு வந்திருந்தார் வைகோ. அவரை ரங்கசாமி சென்று சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் மூலம் அதிமுக கூட்டணிக்கு ரங்கசாமி வருவது உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்பு குறித்து வைகோ கூறுகையில்,
புதுச்சேரி மக்களின் நம்பிக்கையைப் பெற்று முதல்வர் பதவிக்குப் பெருமை சேர்த்தவர் ரங்கசாமி. எளிமையான முதல்வர் என்ற பாராட்டுப் பெற்றவர். நதிநீர் இணைப்பை வலியுறுத்தி பயணம் செய்தபோது புதுச்சேரியில் காத்திருந்து என்னை வரவேற்றவர் ரங்கசாமி.
டெல்லியில் இருக்கும் காங்கிரஸ் கட்சித் தலைமை மாநிலத் தலைவர்களை நினைக்கும் போதெல்லாம் பந்தாடுவது வழக்கமாக இருக்கிறது. தலையாட்டி பொம்மைகளாக காங்கிரஸ் முதல்வர்களை காங்கிரஸ் தலைமை உட்கார வைத்துள்ளது.
சுயமரியாதை உள்ள புதுச்சேரி மண்ணில் அரவிந்தர், பாரதியார், பாரதிதாசன் ஆகியோர் வாழ்ந்துள்ளனர். சுயமரியாதையைக் கருத்தில் கொண்டு வெளிவந்த புதுச்சேரி மக்களிடம் செல்வாக்குப் பெற்றுள்ள ரங்கசாமியின் முயற்சிக்கு வெற்றி கிடைக்கும் என்றார் வைகோ.
விரைவில் ரங்கசாமி தனது புதிய கட்சியை அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு உள்ள நிலையில் தற்போது அவர் வைகோவை சந்தித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அதிமுக கூட்டணிக்கு புதிய கட்சிகளைச் சேர்க்கும் வேலையில் வைகோ ஈடுபட்டுள்ளார். சமீபத்தில் சீமானுடன் அவர் பேச்சு நடத்தினார். இந்த நிலையில் புதுவையில் ரங்கசாமியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications