62வது குடியரசு தினம்: நாடு முழுவதும் கோலாகல கொண்டாட்டம்

இன்று இந்தியாவின் 62வது குடியரசு தினமாகும். இதையொட்டி நாடு முழுவதும் தேசியக் கொடி ஏற்றும் வைபவங்கள் களை கட்டியிருந்தன.
டெல்லியில் குடியரசு தின விழா வழக்கம் போல கண்கவர் அணிவகுப்புடன் நடந்தேறியது. காலை 9.45 மணியளவில் பிரதமர் மன்மோகன் சிங், இந்தியா கேட்டில் உள்ள போர் வீரர் நினைவிடமான அமர் ஜவானில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் அவர் விழா நடைபெறும் இடத்திற்கு வந்து சேர்ந்தார். அதன் பின்னர் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், சிறப்பு விருந்தினரான இந்தோனேசிய அதிபர் டாக்டர் ஹாஜி சுசிலோ பம்பாங் யூத்யோனாவுடன் வந்து சேர்ந்தார்.
அதன் பிறகு பிரதீபா பாட்டீல் தேசியக் கொடியை ஏற்றி வைத்து குடியரசு தின விழாவைத் தொடங்கி வைத்தார். பின்னர் மேஜர் லய்ஸ்ராம் ஜோதின் சிங்குக்கு அசோக் சக்ரா (மறைவுக்குப் பின்னர்) விருதினை அவர் வழங்கினார். அதன் பின்னர் குடியரசு தின அணிவகுப்பு தொடங்கியது.
குடியரசு தின விழாவையொட்டி ராஜ்பாத் மற்றும் டெல்லி முழுவதும் மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இந்தியாவின் படை பலத்தை பறை சாற்றும் வகையிலான மாடல்கள் அணிவகுப்பில் கலந்து கொண்டன. மேலும் டி-90 டாங்குகள், பிரம்மோஸ் லாஞ்சர், பினாகா மல்டி பேரல் ராக்கெட் லாஞ்சர் உள்ளிட்டவை இடம் பெற்றன.
இந்தியக் கடற்படை சார்பில் ஐஎன்எஸ் விராத், தல்வார் கிலோ கிளாஸ் நீர்மூழ்கி, மிக் 29-கே ஆகியவற்றின் மாடல்கள் அணிவகுத்து வந்தன.
மேலும் பல்வேறு மாநிலங்களின் கலாச்சாரப் பெருமைகளை சித்தரிக்கும் அலங்கார ரதங்கள், பல்வேறு துறைகளின் ரதங்களும் அணிவகுப்பில் கலந்து கொண்டன.
துணை குடியரசுத் தலைவர் வாழ்த்து:
இந்திய குடியரசின் அடிப்படைக் கொள்ளைகளான நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி தனது குடியரசு தின வாழ்த்துச் செய்தியில் கூறியிருந்தார்.
அவர் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,
இந்திய மக்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து தங்கள் நாட்டை குடியரசாக்க வேண்டும் என்று உறுதியாக இருந்ததால் நாம் எத்தனையோ வெற்றிகள் அடைந்துள்ளோம்.
வெற்றிகள் பெற்றிருந்தாலும் நம் நாட்டை உருவாக்கியவர்களின் கனவு இன்னும் முழுதாக நிறைவேறவில்லை. கோடிக்கணக்கான இந்திய குடிமக்கள் இன்னும் வறுமை, பசி, நோய், அறியாமையால் வாடுகின்றனர்.
இந்திய குடியரசின் அடிப்படைக் கொள்ளைகளான நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றை மக்கள் பின்பற்ற வேண்டும். இனி வரவிருக்கும் சவால்களை நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து எதிர்கொள்ள வேண்டும்.
அமைதி, முன்னேற்றம் மற்றும் வளமான வாழ்வு பெற நான் அனைத்து குடிமக்களுக்கையும் வாழ்த்துகிறேன் என்று மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications