தர்மபுரி அருகே லாரி மீது கார் மோதல்- 9 ஐயப்ப பக்தர்கள் பலி
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே நின்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் ஐயப்ப பக்தர்கள் 9 பேர் பலியாகினர்.
ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள தண்டிகுப்பத்தைச் சேர்ந்தவர் வெங்கட்ராமப்பா.
இவரது மனைவி சின்னபாப்பா (52), இவர்களது மகன்கள் சீனிவாசலு (30), ராஜேந்திரன் (26), சுப்பிரமணி (39), கணேசன் (32), பேரன் ரவிதேஜா (12), மற்றும் உறவினர்கள் ரமேஷ் (28), மோகன் (25), சுரேஷ் (30), குமார் (21) ஆகியோர் சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்து இருந்தனர்.
கடந்த 30-ம் தேதி இருமுடி கட்டி அனைவரும் குவாலிஸ் காரில் ஐயப்பன் கோவிலுக்கு சென்றனர்.
சாமியை தரிசித்துவிட்டு, பழனி சென்று முருகனை தரிசித்துவிட்டு சேலம் வழியாக தங்களது சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது தர்மபுரி மாவட்டம் தொப்பூர் சோதனைச் சாவடி அருகே கார் சென்று கொண்டிருக்கையில் திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் பின் புறத்தில் மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.
இந்த விபத்தில் சின்னபாப்பா, சீனிவாசலு, ராஜேந்திரன், சுப்பிரமணி, ரமேஷ், மோகன், குமார், சுரேஷ் ஆகிய 8 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
கணேசன், ரவிதேஜா ஆகியோர் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் ரவிதேஜா இறந்தான். கணேசனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications