கேரளாவில் வெடிகுண்டு ஒத்திகை-தீயணைப்பு லாரி மோதி டிஎஸ்பி பரிதாப சாவு
திருவனந்தபுரம்: வெடிகுண்டு ஒத்திகை நடத்தியபோது தீயணைப்பு வாகனம் மோதி டிஎஸ்பி பலியானார்.
தீவிரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக குடியரசு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கேரள மாநிலம் ஆழப்புழாவில் தேசிய பேரிடர் மேலாண்மை இயக்கம் சார்பில் இஎஸ்ஐ மருத்துவமனை வளாகத்தில் நேற்று முன்தினம் மாலை நாட்டு வெடிகுண்டை வெடிக்க செய்து ஒத்திகை நடந்தது.
குண்டு வெடித்த சத்தம் கேட்டதும் அப்பகுதி மக்கள் ஆழப்புழா காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்தவுடன் டிஎஸ்பி ரவீந்திர பிரசாத் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். மருத்துவமனை அருகே வாகனத்தை நிறுத்திவிட்டு வேகமாக இறங்கினார்.
இதற்கிடையே தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ரவீந்திர பிரசாத் வாகனத்தில் இருந்து இறங்கியபோது மின்னல் வேகத்தில் வந்த தீயணைப்பு வண்டி அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார். உடனே ஆழப்புழா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை இறந்தார்.












Click it and Unblock the Notifications