இலங்கை, மத்திய அரசு, தமிழக அரசைக் கண்டித்து மீனவர்கள் ஸ்டிரைக்-மறியல்

இந்தப் போராட்டம் காரணமாக ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்குள் போகவில்லை. மீன்பிடி தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டது. மீனவர்களின் சாலை மறியல் போராட்டத்தால் கிழக்குக் கடற்கரைச் சாலையில் பல இடங்களில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
சென்னையில், திருவொற்றியூர் மீனவர்கள், எண்ணூர் எக்ஸ்பிரஸ் சாலையில் மறியல் போராட்டத்தில் குதித்தனர். இதனால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் போக முடியாமல் தேங்கி நின்றன. போக்குவரத்து பெரும் பாதிப்பை சந்தித்தது.
இதேபோல மெரீனா கடற்கரைப் பகுதி மீனவர்கள், காமராஜர் சாலையில் மறியல் போராட்டத்தில் குதித்ததால் அப்பகுதியிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நாகை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஸ்டிரைக் நடந்தது. மறியல் போராட்டமும் நடத்தப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் மீமித்தல் பகுதி நாட்டுப்படகு மீனவர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் இன்று சாலை மறியல் செய்தனர். காலை 9 மணி முதல் 10.30 மணி வரை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள, மீமித்தல் கடைவீதியில் ஏராளமான நாட்டுப்படகு மீனவர்கள் பஸ் மறியல் செய்தனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வேதாரண்யம் மீனவர்கள் கடந்த 4 நாட்களாக மீன்பிடிக்கப் போகவில்லை. இதனால் நூற்றுக்கணக்கான படகுகள் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி மீனவர்கள் கறுப்பு தினம் அனுஷ்டிப்பு
இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை படுகொலை செய்வதைக் கண்டித்து தூத்துக்குடி மாவட்ட கடலோரப் பகுதி மீனவர்கள் வீடு மற்றும் படகுகளில் கறுப்பு கொடி ஏற்றினர்.
இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை படுகொலை செய்வதைக் கண்டித்தும், இப்பிரச்சனையில் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வலியுறுத்தியும் தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் குடியரசு தினமான நேற்று கருப்பு தினம் கடைபிடித்தனர்.
மாவட்டம் முழுவதும் இலங்கை ராணுவத்தை கண்டித்தும் போஸ்டர் ஒட்டினர். மேலும் வேம்பார், திரேஸ்புரம், தருவைகுளம், மீன்பிடி துறைமுகம், புதிய துறைமுக கடற்கரை பகுதி, பழைய காயல், புன்னகாயல், வீரபாண்டியன் பட்டிணம் ஆகிய கடலோர பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட் வீடுகள், படகுகளில் கறுப்பு கொடி கட்டப்பட்டுள்ளன.
மேலும் பெரும்பாலான மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால் 50 சதவிகிதத்துக்கும் அதிகமான நாட்டு படகுகள் மற்றும் விசைப்படகுகள் கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications