திண்டிவனம் அருகே விபத்து-சென்னை ரயில்கள் தாமதம்
சென்னை: திண்டிவனம் அருகே ரயில் விபத்துக்குள்ளானதால், சென்னைக்கு வர வேண்டிய ரயில்கள் தாமதமாக வந்து கொண்டுள்ளன. இதனால் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
செங்கல்பட்டு- விழுப்புரம் இடையே இருவழி ரயில் போக்குவரத்துக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக டிப்பர் லாரிகள் மூலம் செம்மண் கொண்டு வரப்பட்டு தண்டவாள பகுதியில் கொட்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
நேற்று இரவு திண்டிவனத்தை அடுத்த வைரபுரத்தை சேர்ந்த ராஜூ (25) செம்மண் ஏற்றப்பட்ட டிப்பர் லாரியை ஓட்டி வந்தார். நள்ளிரவு 12.30 மணி அளவில் திண்டிவனத்தை அடுத்த சோலிப்பட்டு என்ற இடத்தில் உள்ள ஆளில்லாத ரயில்வே கேட்டுக்கு லாரி வந்தது.
ரயில் வருவதற்குள் தண்டவாளத்தை கடந்து சென்று விடலாம் என்று ராஜூ நினைத்தார். இதற்காக டிப்பர் லாரியை விரைவாக இயக்கினார். அப்போது திடீரென லாரி தண்டவாளத்தின் நடுவில் பழுதாகி நின்று விட்டது.
அந்த நேரத்தில் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் வந்தது. ரயில் வருவதை அறிந்ததும் ராஜூ அதிர்ச்சி அடைந்தார். ரயில் நெருங்கி வருவதற்குள் டிப்பர் லாரியை தண்டவாள பகுதியில் இருந்து இயக்க முயற்சித்தார்.
ஆனால் அவரது முயற்சி பலனளிக்கவில்லை. இந்த நிலையில் லாரி மீது ரயில் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் லாரியை ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு ரயில் இழுத்துச் சென்றது. இதில் ராஜு உடல்நசுங்கி உயிரிழந்தார்.
இதையடுத்து ரயில் நிறுத்தப்பட்டது. பயணிகளும் பலத்த சப்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்து தூக்கத்திலிருந்து விழித்தெழுந்தனர். ரயிலுக்கு அடியில் லாரியின் சிதைந்த பாகங்கள் சிக்கிக் கொண்டதால் ரயிலை இயக்க முடியவில்லை.
இந்த விபத்து காரணமாக கம்பன், நெல்லை, பாண்டியன், கன்னியாகுமரி, மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஆங்காங்கு நிறுத்தப்பட்டன. ஆனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் திண்டிவனத்திற்கு முன்பாக நிறுத்தப்பட்டது.
இந்த விபத்து காரணமாக ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அனைத்து ரயில்களும் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.
காலை எட்டரை மணிக்கு வர வேண்டிய ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் இதுவரை வரவில்லை.
இந்தநிலையில் பிற்பகல் 12.40 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட வேண்டிய வைகை எக்ஸ்பிரஸ் ரயில் 2 மணிக்குச் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் விபத்து காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டிருப்பதால் எழும்பூர் ரயில்நிலையத்தில் பெரும் பயணிகள் கூட்டம் காணப்படுகிறது.












Click it and Unblock the Notifications