Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பூர் சாயப் பட்டறைகளை மூட உயர் நீதிமன்றம் உத்தரவு!

Subscribe to Oneindia Tamil

Thiruppur Dying Units
சென்னை: திருப்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள அனைத்து சாயப் பட்டறைகளையும் உடனடியாக மூட வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றம், வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

திருப்பூரில் உள்ள சாயப்பட்டறைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் அந்த மாவட்டத்தின் நீர்வளம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. நொய்யல் என்ற ஆறே முழுமையாக மாசடைந்தது.

சாயப்பட்டறைகளிலிருந்து கழிவுகள் வெளியேற்றப்படுவதைத் தடுக்க வேண்டும் என்றும், கழிவுகளை வெளியேற்றும் பட்டறைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி, நொய்யல் ஆறு ஆயக்கட்டுதாரர்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்து கழிவுகளைச் சுத்திகரிக்க கால அவகாசம் வழங்க வேண்டும் என்று சாயப்பட்டறைகளின் உரிமையாளர்கள் தரப்பில் கோரப்பட்டது.

இதையடுத்து சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்க நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியது. சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும் வரை வெளியேற்றப்படும் கழிவுகளுக்கு அபராதம் செலுத்த வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றத்தில் தடை பெற்ற சாயப்பட்டறை உரிமையாளர்கள், இந்தத் தடை காலாவதியான பிறகும், உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை.

எனவே இவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது. மொத்தமுள்ள 713 சாயப்பட்டறைகளில் 413 சாயப்பட்டறைகள் சாயக் கழிவுகளைச் சுத்திகரிக்கவில்லை என்றும், இவற்றை மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நொய்யல் ஆற்றின் மூன்று வெவ்வேறு இடங்களில் நீரை எடுத்து பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் என்று நீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டது.
பரிசோதனையின் முடிவில், நொய்யல் ஆற்றில் சுத்திகரிக்கப்படாத சாயக் கழிவுகள் தொடர்ந்து கலப்பதால், ஆற்று நீர் மேலும் மாசடைந்துள்ளது தெரியவந்தது.

தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் கொண்ட முதன்மை டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் இந்த வழக்கு வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு விவரம்:

நொய்யல் ஆற்றைப் பாதுகாப்பதற்காக, சாயக் கழிவுகள் முழுமையாக சுத்திகரிக்கப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளன. ஆனால், சாயப்பட்டறைகள் தொடர்ந்து சுத்திகரிக்காத கழிவுகளை வெளியேற்றி வந்துள்ளன. இந்த சாயப்பட்டறைகளை மூடுவதற்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தவறிவிட்டது.

இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற பிறகே, சில பட்டறைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் அரசுத் தரப்பில் அளிக்கப்படும் வாக்குறுதிகளை மட்டும் நம்ப முடியாது.

சாயப்பட்டறைகள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டால் மட்டுமே நொய்யல் ஆற்றை நச்சுக் கழிவுகளில் இருந்து பாதுகாக்க முடியும்.

திருப்பூர் பகுதியில் உள்ள அனைத்து சாயப்பட்டறைகளையும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உடனடியாக மூட வேண்டும். இந்தப் பட்டறைகளுக்கு மின் இணைப்புகளும் துண்டிக்கப்பட வேண்டும்.

இவற்றில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள், முழுவதும் சுத்திகரிக்கப்படுவதை உறுதிசெய்யாத வரை அவை மீண்டும் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்படக் கூடாது.

அனைத்து சாயப்பட்டறைகளையும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் நியமிக்கப்படும் அதிகாரிகள், கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் ஆகியோர் அடங்கிய குழு தனித்தனியே ஆய்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு பட்டறைக்கும் முழுமையான அறிக்கையைத் தயார் செய்ய வேண்டும்.

அந்தப் பட்டறைகள் மீண்டும் இயங்குவதற்கு அனுமதி வழங்கலாமா என்ற அடிப்படையில் இந்த அறிக்கையைத் தயாரிக்க வேண்டும். கழிவுகளை முழுவதுமாக சுத்திகரிக்கும் அமைப்புகள் இல்லாத சாயப்பட்டறைகளுக்கு, அந்தக் குறையை சரிசெய்ய வாய்ப்பு வழங்க வேண்டும். அந்தப் பட்டறைகளை குழுவினர் மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும்.

கழிவுகளை முழுவதுமாக சுத்திகரிக்கும் அமைப்பு உள்ள சாயப்பட்டறைகளை மீண்டும் திறக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிடலாம். எனினும், இந்தப் பட்டறைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும்.

சுத்திகரிப்புக் கருவிகளை சோதனையிடுவதற்காக தாற்காலிகமாக மின் இணைப்பு வழங்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரை செய்யலாம். மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் முன்னிலையில் இந்தச் சோதனை நடைபெற வேண்டும்.

கிரிமினல் நடவடிக்கை...

சோதனையின் போது சாயப்பட்டறைகளில் கூடுதலாக கருவிகளோ, பைப் இணைப்புகளோ இருந்தால் அவற்றையும் அகற்ற வேண்டும். உயர் நீதிமன்ற உத்தரவுகளைப் பின்பற்றாமல் சுத்திகரிக்கப்படாத கழிவுகளை வெளியேற்றி சாயப்பட்டறைகளிடம் இருந்து அபராதம் வசூலிக்க வேண்டும்.

அதேபோல், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய நோட்டீஸுக்கு பிறகும் கழிவுகளைச் சுத்திகரிக்கும் இயந்திரங்களைப் பொருத்தாமல் இருந்த பட்டறைகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாயப்பட்டறைகள் உயர் நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றாத காலக் கட்டத்தில், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் அதிகாரிகளாகப் பணிபுரிந்தவர்களின் பெயர் பட்டியலை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

வழக்கு விசாரணை மார்ச் 21-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+