நிரூபமாவின் இலங்கை பயணம் வெறும் கண்துடைப்பு-கத்காரி கருத்து
சென்னை: தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்தக் கோரி இலங்கை செல்வதாக நிரூபமா ராவ் சொல்வது வெறும் கண்துடைப்பு நாடகம் என்று கூறியுள்ளார் பாஜக தலைவர் நிதின் கத்காரி.
சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கத்காரி பேசுகையில்,
தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும் போது இலங்கை கடற்படையால் சுட்டு கொல்லபடுவதை பாஜக வன்மையாக கண்டிக்கிறது. இதுவரை 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை கடற்படை தாக்குதலுக்கு பலியாகி இருப்பது வேதனை அளிக்கிறது. இதுகுறித்து வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பாஜக கேள்வி எழுப்பும்.
இலங்கைக்குச் சென்று இதுகுறித்துப் பேசி தடுத்து நிறுத்த நிரூபமா ராவை அனுப்பி வைப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது. நிரூபமா ராவும் இலங்கை சென்றுள்ளார். ஆனால் இதனால் எந்தப் பயனும் ஏற்படாது. மாறாக, இது ஒரு கண்துடைப்பு நாடகமே.
இந்தியா முழுவதும் உள்ள நதிகளை ஓருங்கிணைக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கட்சியின் கொள்கை முடிவு. வட இந்தியாவில் மக்கள் தண்ணீரால் பாதிக்கப்படுகின்றனர். தென்னிந்தியாவில் மக்கள் வறட்சியால் பாதிக்கபடுகிறார்கள். இதற்கு தீர்வு காண நதிகளை இணைக்க வேண்டும்.
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் கைப்பாவையாக சி.பி.ஐ. செயல்படுகிறது. எனவேதான் இந்த விவகாரம் குறித்து விசாரிக்க நாடாளுமன்ற கூட்டு நடவடிக்கைக் குழு அமைக்க வேண்டும் என பா.ஜ.க. போராடி வருகிறது.
இந்த விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் எப்படி செயல்படுவது என்பது குறித்து கூட்டணி கட்சிகளுடன் கலந்து பேசி அத்வானி முடிவு எடுப்பார். சுவிஸ் வங்கியில் இந்திய கறுப்புப் பணம் 20 லட்சம் கோடி உள்ளது. அதை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அப்பணத்தை மீட்டால் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு பயன்படுத்தலாம்.
தமிழகத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலைப் பொறுத்தவரை காங்கிரஸ் - திமுக கூட்டணிக்கு எதிராக எந்தக் கூட்டணி அமைந்தாலும், அதில் பாஜக-வை இணைத்து கொள்ள விரும்பினால் கூட்டணிக்கு நாங்கள் தயார். இல்லாவிட்டால் பாஜக தனித்து போட்டியிடும் என்றார்.












Click it and Unblock the Notifications