ரயில் கூரையில் பயணித்த 10 பேர் பலி, பலர் படுகாயம்-ரயிலுக்கு தீ வைப்பு
லக்னோ: உத்தர பிரதேசத்தில் ரயில் கூரையில் பயணம் செய்த ஏராளமான இளைஞர்களில் 10 பேர் பலியானார்கள். மேலும், பலர் பலியாகி இருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் நேற்று காலையில் இந்தோ-திபெத் போலீஸ் படைக்கு ஆள் சேர்ப்பு நடந்தது. இதில் கலந்து கொள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 1 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வந்திருந்தனர்.
பின்னர் அவர்கள் ஹவுரா சென்ற மகிரி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் தங்கள் ஊர்களுக்கு திரும்பினர். அவர்கள் அனைவருக்கும் ரயிலில் இடம் இல்லை. அதனால் நூற்றுக்கணக்கானவர்கள் எப்படியும் ஊர் திரும்பினால் போதும் என்று நினைத்து ரயிலின் கூரையில் அமர்ந்து பயணித்தனர்.
கூரை நிறைய ஆட்களுடன் ரயில் ஷாஜகான்பூர் மாவட்டம் ரோஜா ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருக்கையில் பாதைக்கு மேல் சென்ற மின்சார வயரில் இருந்து மின்சாரம் தாக்கியது. இதில் 10 இளைஞர்கள் கீழே தூக்கி வீசப்பட்டனர். அவர்கள் அந்த இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தனர்.
ரயில் கூரை மேல் இருந்த மேலும் பலர் மேம்பாலம் இடித்தும், மின்சாரம் தாக்கிய அதிர்ச்சியாலும் ரயிலை விட்டு கீழே குதித்தனர். இதனாலும் பலர் உயிர் இழந்திருக்கக்கூடும் என்று தெரிகிறது. இந்த சம்பவத்தில் 15 பேருக்கும் அதிகமானோர் பலியாகி இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தவிர பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் ஆத்திரம் அடைந்த மற்ற இளைஞர்கள் ரயிலின் சில பெட்டிகளுக்கு தீ வைத்தனர்.












Click it and Unblock the Notifications