கருணாநிதியையும் கைது செய்ய வேண்டும்: ஜெயலலிதா

தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், ஸ்பெக்ட்ரம் ஊழலால் ரூ.1.76 லட்சம் கோடி வரை நாட்டுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆனால், ராசாவுக்குப் பிறக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற கபில் சிபல் எந்த இழப்பும் ஏற்படவில்லை என்றார்.
இப்போது மத்திய அரசின் மற்றொரு அங்கமான சிபிஐ ராசாவை கைது செய்திருக்கிறது. எந்த இழப்பும் ஏற்படவில்லை என்றால் ராசாவை ஏன் கைது செய்ய வேண்டும்?.
இந்த வழக்கில் கருணாநிதியையும், நிரா ராடியாவிடம் தொலைபேசியில் பேசிய கனிமொழி, ராசாத்தி அம்மாள் உள்ளிட்ட கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களையும் கைது செய்ய வேண்டும் என்றார்.
கருணாநிதி பிறந்த ஊரில் ஆர்ப்பாட்டம்-ஜெ:
இந் நிலையில் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், 2008ம் ஆண்டு துவங்கப்பட்ட திருக்குவளை வளாக அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழக கல்லூரி மூன்று ஆண்டுகளாகியும் எந்தவிதமான அடிப்படை வசதியும், கட்டமைப்பு வசதியும் இல்லாமல் இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரிக்கு என்று தனியாக கட்டிடம் இல்லை என்றும், திருக்குவளை அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள வகுப்பறைகளில் தான் பொறியியல் கல்லூரி மாணவர்கள் பயின்று வருகின்றனர் என்றும், மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் மரத்தடியில் பாடம் பயின்று வருகின்றனர் என்றும், இந்தக் கல்லூரிக்கு என்று விடுதி, ஆய்வுக் கூடம், விளையாட்டு மைதானம் ஆகியவை இல்லை என்றும் கல்லூரி மாணவ மாணவியர் தெரிவிக்கின்றனர்.
தங்குமிடம், உணவு மற்றும் போக்குவரத்து ஆகியவை உட்பட கல்லூரி மாணவ மாணவியருக்கு தனித் தனியாக விடுதி வசதி செய்து தரப்படும் என்று கல்லூரி நிர்வாகம் அறிவித்து இருக்கிறது. இந்த பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவியர் வெவ்வேறு ஊர்களில் உள்ள நான்கு தனியார் இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளதாகவும், உணவுப் பொருட்கள் வேறு இடத்திலிருந்து வரவழைத்து கொடுக்கப்படுகின்றன என்றும் தகவல்கள் வருகின்றன.
தங்குமிடம், உணவு மற்றும் போக்குவரத்து வசதி உட்பட அனைத்திற்கும் சேர்த்து ரூ 1,600 முதல் ரூ 2,000 வரை மாதம் செலவாகும் என்று கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டாலும், வாடகை, உணவு வசதி, போக்குவரத்து வசதி, மின் கட்டணம் என ஒவ்வொன்றிற்கும் தனியாரிடம் வசூல் செய்யப்படுவது போல் தான் மாணவ மாணவியரிடமும் வசூலிக்கப்படுகின்றன என்றும் கூறப்படுகிறது.
துவக்கப் பள்ளிக்கு இருக்க வேண்டிய அடிப்படை கட்டமைப்பு வசதிகள் கூட திருக்குவளை வளாக அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்திற்கு இல்லை என்று அங்கு படிக்கும் மாணவ மாணவியர் தெரிவிக்கின்றனர்.
எனவே, நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை வளாக அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழக கல்லூரியில் நிலவும் அவல நிலைக்குக் காரணமான தி.மு.க. அரசைக் கண்டித்தும், அக்கல்லூரி மாணவ மாணவியருக்குத் தேவையான கட்டமைப்பு வசதி, விடுதி வசதி, போக்குவரத்து வசதி மற்றும் தொழில்நுட்ப வசதிகளை செய்து தர உடனடி நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியும், அதிமுக சார்பில் 4.2.2011 வெள்ளிக்கிழமை திருக்குவளை வளாக அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழக கல்லூரி எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications