ராசாவைத் தொடர்ந்து விரைவில் சுரேஷ் கல்மாடியும் கைது?

ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு நிகரானது என்று கூற முடியாவிட்டாலும் மிகப் பெரிய ஊழல் காமன்வெல் விளையாட்டுப் போட்டி ஊழல். காமன்வெல்த் போட்டி தொடர்பான ஒவ்வொரு நடவடிக்கையிலும் புகுந்து விளையாடியிருக்கிறார்கள் சுரேஷ் கல்மாடியும், அவரது குழுவில் இருந்தவர்களும். அதேபோல நாட்டை உலுக்கிய இன்னொரு ஊழல் சம்பவம் மும்பை ஆதர்ஷ் வீட்டு வசதிக் கழக ஊழல்.
இந்த வழக்குகளையும் சிபிஐ விசாரித்து வருகிறது. காமன்வெல்த் போட்டி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக இருந்த சுரேஷ் கல்மாடி சமீபத்தில் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார். விரைவில் அவரை சிபிஐ கைது செய்யக் கூடும் என்று தெரிகிறது.
சமீபத்தில் டெல்லியில் நடந்த சிபிஐ உயர் மட்டக் கூட்டத்தில், கல்மாடிக்கு எதிரான ஆதாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. போட்டி ஜோதி ஓட்டம் தொடர்பான ஊழல், கருவிகள், சாதனங்கள் வாங்கியதில் நடந்த ஊழல்கள், போட்டியை நடத்தியதில் நடந்த ஊழல்கள், ஆதாரத்தை அழித்த செயல் என ஏகப்பட்ட வழக்குகள் கல்மாடிக்கு எதிராக காத்துள்ளன.
விரைவில் கல்மாடி கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது. ராசா கைது விவகாரம், அரசியல் ரீதியாக, திமுகவுக்கு நெருக்குதல் தரும் நடவடிக்கை என்ற பேச்சு எழுந்திருப்பதால், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கல்மாடியை விரைவில் சிபிஐ கைது செய்யக் கூடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
ஏற்கனவே காமன்வெல்த் போட்டி ஊழல் வழக்கில், ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்களான தர்பாரி, சஞ்சய் மகேந்திரூ, ஜெயச்சந்திரன் ஆகியோர் கைதாகியுள்ளனர். இவர்களில் தர்பாரி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளது. குறித்தா காலத்திற்குள் அவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாததால் ஜாமீன் கிடைத்து வெளியே வந்து விட்டார் தர்பாரி.
ஆதர்ஷ் சொசைட்டி வழக்கைப் பொறுத்தவரை சமீபத்தில் முதல் தகவல் அரிக்கையை சிபிஐ பதிவு செய்தது. அதில், குற்றச் சதிச் செயல் குற்றச்சாட்டின் கீழ் இடம் பெற்றுள்ள பெயர்களில் முன்னாள் முதல்வர் அசோக் சவானின் பெயரும் இடம் பெற்றுள்ளது. எனவே அவரும் கைது செய்யப்படும் வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications