ஜெ. சொல்வதால் யாரை வேண்டுமானாலும் கைது செய்ய முடியாது-காங்

திமுகவுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருக்கும் ராசா கைது விவகாரம் குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் அபிஷேக் சிங்வி செய்தியாளர்களிடம் பேசுகையில்,
ஆ.ராசா கைது செய்யப்பட்டிருப்பது, ஸ்பெக்ட்ரம் வழக்கில் அரசாங்கம் கடுமையான, தீவிரமான நடவடிக்கை எடுத்துள்ளதைத்தான் காட்டுகிறது. இதனால் பிரதமர் மன்மோகன்சிங்கின் நம்பிக்கையோ, மதிப்போ அல்லது மத்திய அரசின் நம்பிக்கையோ, மதிப்போ குறைந்து விடவில்லை.
மாறாக, சட்டம் தனது கடமையை செய்ய அனுமதி அளித்ததன் மூலம், பிரதமரின் மதிப்பும், அரசாங்கத்தின் மதிப்பும் உயர்ந்து உள்ளது என்பதுதான் உண்மை.
இந்த கைது நடவடிக்கையால் பிரதமர் மீதும், மத்திய அரசு மீதும் உள்ள நம்பிக்கைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. மாறாக மத்திய அமைச்சரவையில் இருந்த ஒருவரே கைது செய்யப்பட்டிருப்பது அரசு மீதான நம்பிக்கையை அதிகரிக்கவே செய்யும். மற்ற அரசுகள் போல் இல்லாமல் இப்போதைய ஆட்சியில் எவ்வித குறுக்கீடும் இன்றி, சட்டம் தன் கடமையைச் செய்து வருகிறது.
அதே போல ஆ.ராசா கைது செய்யப்பட்டு இருப்பதால் காங்கிரஸ் தி.மு.க. கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை. ராசா கைது செய்யப்பட்டு இருப்பது சட்ட நடவடிக்கையின் தொடர்ச்சி தானே தவிர கூட்டணிக்கோ, கட்சி அரசியலுக்கோ எந்த சம்பந்தமும் இல்லை என்றார் அவர்.
மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த ஒருவர் பல கோடி ரூபாய் முறைகேடு குற்றச்சாட்டின் பேரில் கைதாகியுள்ளதால் இதற்கு அமைச்சரவையும், பிரதமரும்தானே பொறுப்பேற்க வேண்டும் என்ற கேள்விக்கு இது பொருத்தமற்ற கேள்வி என்றார் சிங்வி.
முதல்வர் கருணாநிதியையும், அவரது குடும்பத்தினரையும் கைது செய்ய வேண்டும் என்று ஜெயலலிதா கூறியிருக்கிறாரே என்ற கேள்விக்கு, யாராவது ஒருவர் கூறி விட்டார் என்பதற்காக யாரை வேண்டுமானாலும் கைது செய்ய முடியாது என்றார் சிங்வி.
தொடர்ந்து அவர் கூறுகையில், ஆ.ராசா கைது, ஆதர்ஷ் குடியிருப்பு ஒதுக்கீடு விவகாரத்தில் மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வர் அசோக் சவாண் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டிருப்பது போன்ற நடவடிக்கைகளால் காங்கிரஸ் கட்சி மீதும், காங்கிரஸ் அரசின் மீதும் மக்கள் வைத்துள்ள நம்பிக்கை அதிகரித்துள்ளது என்றார்.
கூட்டணிக்குப் பாதிப்பு வராது-ஆசாத்
அதேபோல மத்திய அமைசத்சரும், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளருமான குலாம் நபி ஆசாத் கூறுகையில், ராசா கைதால், திமுக, காங்கிரஸ் இடையிலான உறவு பாதிக்கப்படாது. இரு கட்சிகளுக்கிடையிலான உறவு, கொள்கைகள், கோட்பாடுகள் அடிப்படையில் அமைவதாகும் என்றார்.
ராசா கைது செய்யப்படவுள்ளது முதல்வர் கருணாநிதிக்கு முன்கூட்டியே தெரியுமா என்ற கேள்விக்கு, சிபிஐ இந்த வழக்கை விசாரித்து சட்டப்படியான நடவடிக்கைளை எடுத்து வருகிறது. ஒரு அரசியல்வாதியைக் கைது செய்ய வேண்டும் என்றால் அவர் சார்ந்த கட்சித் தலைவரிடம் ஆலோசனை எல்லாம் நடத்த மாட்டார்கள் என்றார் ஆசாத்.












Click it and Unblock the Notifications