சேகர் பாபு வருகையால் திமுகவின் பலம் அதிகரிப்பு: எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு
சென்னை: அதிமுகவில் ஓரம் கட்டப்பட்ட வட சென்னையின் முக்கியப் புள்ளியான பி.கே.சேகர்பாபு எம்.எல்.ஏ. திமுகவில் சேர்ந்ததில் கட்சிக்கு பலம் அதிகரித்துள்ளதாக, அவரது வருகையை குறைத்துக் கூறியதாக கூறப்பட்ட வடசென்னை மாவட்ட தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான வி.எஸ்.பாபு தெரிவித்துள்ளார்.
வட சென்னை மாவட்ட அதிமுக செயலாளராக கிட்டத்தட்ட 10 வருடம் இருந்தவர் சேகர்பாபு. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி எம்.எல்.ஏ.வாக 2 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர் திடீர் என்று கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து அவர் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார்.
அவர் திமுகவில் இணைந்ததால் கட்சிக்கு எந்தவித லாபமும் இல்லை என்று வடசென்னை மாவட்ட தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான வி.எஸ்.பாபு கூறியதாக செய்திகள் வெளியானது.
அந்த செய்திகளுக்கு மறுப்புத் தெரிவித்து அவர் கூறியதாவது,
சிறந்த உழைப்பாளியான பி.கே.சேகர்பாபு திமுகவில் இணைந்தது வட சென்னை பகுதியில் கட்சிக்கு பெரிய பலமாக உள்ளது. அவர் கலைஞர் மற்றும் தளபதியுடன் கைகோர்த்து இருக்கிறார். அவர் திமுகவுக்கு வந்ததில் ஒவ்வொரு தொண்டனுக்கும் மகிழ்ச்சி.
அதிலும் குறிப்பாக நான் மனநிறைவோடு அவரை வரவேற்கின்றேன். சேகர்பாபு வரவால் வட சென்னையில் திமுகவின் பலம் அதிகரித்துள்ளது. இதனால் இந்த மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது எளிது.
சேகர் பாபுவுடன் அவரது ஆதரவாளர்கள் ஏராளமானவர்களும் திமுகவில் இணைந்துள்ளனர். தற்பொழுதும் பலர் வந்த வண்ணம் உள்ளனர். சேகர் பாபுவை பார்க்கும் வட சென்னையில் உள்ள பல அதிமுகவினர் எங்களையும் அழைத்துச் சென்றிருக்கக்கூடாதா என்று ஆதங்கப்படுவதை பார்க்க முடிகிறது என்றார்.












Click it and Unblock the Notifications