போராட்டக்காரர்களுடன் முபாரக் ஆதரவாளர்கள் கடும் மோதல்-6 பேர் பலி
கெய்ரோ: எகிப்துப் போராட்டத்தில் புதிய திருப்பமாக, அதிபர் ஹோஸ்னி முபாரக்கின் ஆதரவாளர்கள், அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வரும் முபாரக் எதிர்ப்பாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி தாக்குதலைத் தொடங்கியுள்ளனர். இதில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கெய்ரோவில் உள்ள சுதந்திர சதுக்கம் (தஹிரிர் ஸ்கொயர்) லட்சக்கணக்கானோர் குவிந்து முபாரக்குக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் திடீரென முபாரக் ஆதரவாளர்கள் இவர்கள் மீது தாக்குதலில் இறங்கியுள்ளனர். அனைவரும் துப்பாக்கி சகிதம் தாக்குதலில் குதித்துள்ளனர்.
போராட்டக்காரர்களை நோக்கி சரமாரியாக இவர்கள் சுட்டு கலைத்து வருகின்றனர். இந்த சண்டையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் எகிப்து நிலவரம் மேலும் மோசமடையத் தொடங்கியுள்ளது. பெரும் உயிர்ப்பலி ஏற்படும் வாய்ப்புகளும் ஏற்பட்டுள்ளன.
குதிரைகள், ஒட்டகங்கள் மூலம் முபாரக் ஆதரவாளர்கள் சுதந்திர சதுக்கத்திற்கு வந்து தாக்குதலில் ஈடுபட்டதாகவும், துப்பாக்கிகளுடன் அவர்கள் தாக்கியதாகவும் எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் சுதந்திர சதுக்கத்திற்கு அருகே உள்ள பாலத்தின் மீதிருந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அவர்கள் கூறினர்.
முபாரக்குக்கு எதிராக போராடி வரும் போராட்டக்காரர்கள், சுதந்திர சதுக்கத்தை விட்டு வெளியேறாமல் தொடர்ந்து அங்கேயே முகாமிட்டு இரவு பகலாக போராடி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முதல் அவர்கள் மீது முபாரக் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளதால் போராட்டம் திசை திரும்பி பெரும் வன்முறையாகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
கூலிக்கு ஆட்களை நியமித்து தங்களை முபாரக் தாக்கத் தொடங்கியுள்ளதாக போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் சீருடைய அணியாத போலீஸ்காரர்களும் இக்கும்பலில் இடம்பெற்றிருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நட்ட மாட்டோம் என்று ராணுவம் கூறியுள்ளது. ஆனால் இந்தத் தாக்குதலை அது தடுக்காமல் வேடிக்கை
பார்த்துக் கொண்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்குப் பதிலடியாக போராட்டக்காரர்களில் சிலர் கையெறி குண்டுகளை வீசித் தாக்கதுல் நடத்தியுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் இரு தரப்புக்கும் இடையே 12 மணி நேரம் கடும் சண்டை நடந்துள்ளது.
போராட்டம் திசை மாற ஆரம்பித்திருப்பதால் எகிப்தில் பெரும் உயிர்ப்பலி ஏற்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
முபாரக் பதவியிலிருந்து விலக நாளை வரை போராட்டக்காரர்கள் கெடு விதித்துள்ளனர்.மேலும் நாளை பிரமாண்ட போராட்டத்தையும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதை முறியடிக்கும் வகையிலேயே முபாரக் தனது ஆதரவாளர்களைத் தூண்டி விட்டு வன்முறையை உருவாக்கியிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications