மேட்டூரிலிருந்து குழாய் மூலம் தண்ணீர் எடுக்கும் கர்நாடகா-தமிழக அரசுக்கு வைகோ கண்டனம்
சென்னை: மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியிலிருந்து கர்நாடகா அத்துமீறி தண்ணீர் எடுத்து வருகிறது. ஆனால் இதைத் தடுக்காமல் தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வைகோ விடுத்துள்ள அறிக்கை:
மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம் 120 அடி. நீர்ப்பிடிப்புப் பகுதி 152 சதுர மீட்டர் பரப்பளவு பகுதியைக் கொண்டது. 120 அடி கொள்ளவு இருக்கும்பொழுது மேட்டூர் முதல் ஒகேனக்கல் அருவி வரை நீர் தேங்கி நிற்கும்.
கர்நாடக மாநிலம் கொள்ளேகால் தாலுகாவில் மாதேஸ்வரன் மலை, தமிழக எல்லையில் உள்ள பாலாற்றில் இருந்து 18 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. மாதேஸ்வரன் மலைக்கு காவிரிலிருந்து குடிநீர் விநியோகம் செய்ய கர்நாடக அரசு முடிவெடுத்து அதற்காக மாதேஸ்வரன் மலையிலிருந்து வனப்பகுதி வழியாக பாலாறு வரை 18 கிலோ மீட்டர் வரையிலும், அங்கிருந்து கோபி நத்தம் செல்லும் வழியில் எண்ணூர் கண்டூர் பகுதி வரை 4 கிலோ மீட்டர் தூரம் குழாய்கள் பதித்துள்ளது.
எண்ணூரை அடுத்துள்ள கண்டூர் என்ற இடத்தில் பம்பிங் ஸ்டேஷன் அமைப்பதற்காக மேட்டூர் அணைக்குள் மண் ரோடு அமைக்கும் பணியை ஒப்பந்ததாரர்கள் மேற்கொண்டுள்ளனர்.
மேட்டூர் அணையில் நீர்ப்பரப்புப் பகுதியில் 15 மீட்டர் வரை மண்ணைக் கொட்டி ரோடு போட்டுள்ள கர்நாடக அரசு, தற்போது காவிரியின் மையப்பகுதி வரை ரோடு போடும் பணியை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் கோடைகாலத்தில் காவிரியில் நீர் வரத்து குறைந்தாலும் மையப்பகுதியில் ஓடும் குறைந்தபட்ச நீரையும் குடிநீருக்கு எடுக்க முடியும்.
ரோடு போடும், குடிநீர் எடுக்கும் இடம் அனைத்துமே தமிழகத்துக்குச் சொந்தமான மேட்டூர் அணை நீர்ப்பரப்பு பகுதி. இது மத்திய அரசின் வனம் மற்றும் சுற்றுச் சூழல் துறையின் அனுமதியின்றியும், தமிழக அரசின் அனுமதியின்றியும் செயல்படும் கர்நாடக அரசின் தன்னிச்சையான அத்துமீறிய செயல்.
தமிழக அரசு எல்லையில் கட்டப்பட உள்ள ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்திய இன்றைய கர்நாடக முதல்வர் எடியூரப்பா மீது தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இன்றும் தமிழத்தினுடைய உரிமையை மதிக்காமல் தன்னிச்சையாக தண்ணீர் எடுக்கும் நடவடிக்கையில் இறங்கி உள்ள கர்நாடக அரசை தடுத்து நிறுத்த முயற்சி எடுக்கவில்லை.
தமிழகத்தை ஆளும் தி.மு.க. அரசு முல்லைப் பெரியாறு, காவிரி, பாலாறு, பாம்பாறு போன்ற நதிகளின் உரிமையைக் காவு கொடுத்ததுபோல, இப்பொழுதும் கடமையாற்றாமல் தமிழகத்துக்கு துரோகம் இழைக்கும் வகையில் செயல்பட்டு வருவதால் தமிழகத்தின் எதிர்காலமே பாழாகும் ஆபத்து நேர்ந்துள்ளது என்பதால் கர்நாடக அரசுக்கும் கடமையாற்றாத கருணாநிதி அரசுக்கும் கண்டனம் தெரிவிப்பதாக வைகோ தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications