வீடுதேடி வரும் ரேஷன் பொருள்கள்... சென்னையில் சேவை தொடங்கியது
சென்னை: ரேஷன் பொருட்களை வீட்டுக்கே போய் பொதுமக்களுக்கு வழங்கும் புதிய சேவை சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகளுக்கு சென்றுதான் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை நியாய விலைக்கு வாங்கி வந்தனர். 1600 கார்டுகளுக்கு மேல் உள்ள ரேஷன் கடைகளில் தினமும் நீண்ட கியூ காணப்பட்டது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி, அதிகமான கார்டு உள்ள பகுதிகளுக்கு நேரடியாகவே சென்று பொருட்களை வினி யோகிக்க அரசு சமீபத்தில் அனுமதி வழங்கியது.
இதையடுத்து, சோதனை அடிப்படையில் கோடம்பாக்கம் பகுதியில் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம் நடத்தும் 5 ரேஷன் கடைகளின் சார்பில், நடமாடும் ரேஷன் கடை இன்று முதல் செயல்படத் தொடங்கியது. இதன் தொடக்க விழா கோடம்பாக்கம் காமராஜர் காலனி 9-வது தெருவில் நடந்தது. இதற்காக அங்கு வேனில் அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, கோதுமை மாவு, பாமாயில், மளிகை பொருட்கள் பாக்கெட்டு கொண்டு வரப்பட்டன.
அந்த தெருவில் உள்ளவர்கள் ரேஷன் கார்டுகளை கொண்டு வந்து தேவையான பொருட்களை ரேஷன் விலையில் வாங்கி சென்றனர். அந்த கார்டுகள் விவரம் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டன. அரிசி, சர்க்கரை எடை போட்டு வழங்கப்பட்டது. மற்ற பொருட்கள் பாக்கெட்டுகளாக வினியோகம் செய்யப்பட்டன. முதல் விற்பனையை உணவுப்பொருள் வழங்கல் பிரிவு ஆணையர் பாலச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
சென்னை நகரில் வாடகைக்கு இடம் பிடித்து ரேஷன் கடை நடத்தினால் அதிக செலவு ஆகிறது. ஆனால் இதுபோன்ற வாகனங்களில் நடத்தப்படும் நடமாடும் ரேஷன் கடைகளுக்கு குறைந்த செலவே ஆகிறது. எனவே நடமாடும் ரேஷன் கடைகளுக்கு மக்கள் அதிக ஆதரவு தந்தால் மேலும் பல இடங்களுக்கு விரிவுப்படுத்த வாய்ப்புள்ளது, என்று தனி அதிகாரி சக்தி சரவணன் கூறினார்.












Click it and Unblock the Notifications