நாளை தமிழக இடைக்கால பட்ஜெட் தாக்கல்-சலுகை 'மழை' இருக்கும்!
சென்னை: 2010-11ம் ஆண்டுக்கான தமிழக இடைக்கால பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படுகிறது.
தமிழக சட்டமன்றத்தின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் கடந்த மாதம் 8ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. 13ம் தேதி சட்டசபை ஒத்திவைக்கப்பட்டு பிப்ரவரி 4ம் தேதி கூடும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது. மறைந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் போளூர் வரதன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இன்று சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது
தமிழக சட்டசபைக்கு வரும் ஏப்ரல் கடைசி வாரம் அல்லது மே முதல் வாரத்தில் தேர்தல் நடக்க உள்ளது. இதனால் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட முடியாத நிலை உள்ளது.
இதையடுத்து நாளை இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் அன்பழகன் தாக்கல் செய்கிறார்.
தேர்தலையொட்டி தாக்கல் செய்யப்படும் நாளைய இடைக்கால பட்ஜெட்டில் ஏராளமான சலுகைத் திட்டங்கள் இடம் பெறும் என்று தெரிகிறது.
இதைத் தொடர்ந்து வரும் திங்கள்கிழமை முதல், பட்ஜெட் மீதான விவாதம் நடக்கிறது. 10ம் தேதி பட்ஜெட் மீதான விவாதத்துக்கு நிதியமைச்சர் பதிலுரை தருவார்.
இந் நிலையில் இன்று சபாநாயகர் ஆவுடையப்பன் தலைமையில் அலுவல் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அதில் மொத்தமுள்ள 17 உறுப்பினர்களில் முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட 16 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். விஜயகாந்த் கலந்து கொள்ளவில்லை. இக் கூட்டத்தில் வரும் 10ம் தேதி வரை சட்டமன்ற கூட்டத் தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டது.
சேகர் பாபுவுக்கு மாற்று இடம்:
இந் நிலையில் அதிமுகவில் இருந்து விலகி அண்மையில் திமுகவில் இணைந்த ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏ சேகர் பாபுவுக்கு சட்டமன்றத்தில் மாற்று இடம் ஒதுக்கப்பட்டு இருப்பதாக சபாநாயகர் ஆவுடையப்பன் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், சேகர் பாபு மீது நடவடிக்கை எடுக்குமாறு அதிமுகவில் இருந்தோ அல்லது அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டதாகவோ இதுவரை எனக்கு எந்தத் தகவலும் வரவில்லை. தொலைபேசி மூலம் பேரவைச் செயலாளருக்கு சேகர் பாபு எம்எல்ஏ விடுத்த வேண்டுகோளை ஏற்று அவருக்கு இருக்கை எண்.190 (எதிர்க்கட்சி வரிசை) ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications