ஆட்சி மாறுதல் குறித்து முபாரக் நல்ல முடிவு எடுப்பார் : ஒபாமா நம்பிக்கை
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஒபாமா எகிப்து அதிபரைத் தொடர்பு கொண்டு நாட்டில் நடக்கும் போராட்டத்தை கருத்தில் கொண்டு, நாட்டின் அமைதிக்கும், ஜனநாயகத்திற்கும் வழி வகுக்கும் வகையில் பதவி விலக வலியுறுத்தியுள்ளார். முபாரக் ஒரு நல்ல முடிவு எடுப்பார் என்று ஒபாமா நம்புகிறார்.
இது குறி்த்து ஒபாமா கூறியதாவது,
அதிபர் முபாரக் நாட்டின் மீது அக்கறை உள்ளவர். அவர் ஒரு தேசபக்தர். ஆட்சியில் உள்ளவர்களையும், நாட்டு மக்களின் கூக்குரலையும் கேட்டு அவர் ஆட்சி மாறுதல் குறித்து முடிவு எடுக்க வேண்டும்.
எகிப்தின் எதிர்காலம் நல்லபடியாக இருக்க வேண்டும் என்றால் ஆட்சி மாறுதல் ஏற்பட வேண்டும். ஜனநாயக முறை கொண்டு வர வேண்டும், நியாயமான, சுதந்திரமான தேர்தல் நடக்க வேண்டும், மக்கள் குறை கேட்கும் பிரதிநிதிகள் அரசு மலர வேண்டும்.
அடுத்த தேர்தலில் நிற்கப் போவதில்லை என்று முபாரக்கே அறிவித்திருக்கிறார். மறுபடியும் பழை முறைகளுக்கே திரும்புவது ஒத்து வராது. அடக்குமுறை ஒத்து வராது. வன்முறையில் ஈடுபடுவதும் வேலைக்கு ஆகாது.
ஆட்சி மாறுதல் குறித்து ஏற்கனவே பேச்சுவார்த்தை துவங்கிவிட்டது என்று நினைக்கிறேன் என்றார்.
இதற்கிடையே அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹில்லாரி கிளின்டன் எகிப்து வெளியுறவுத் துறை அமைச்சர் அஹமது அபௌல் கெய்டை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். ஆனால் அந்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில் துணை அதிபர் உமர் சுலைமானும், தலைமை ராணுவ அதிகாரிகளுடன் நாட்டின் நிலைமை குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். வரும் செப்டம்பர் மாதத்தில் தேர்தல் நடக்கும்வரை முபாரக்கின் அதிகாரங்களை தற்காலிகமாக சுலைமானுக்கு கொடுக்க முடியுமா என்று ஆலோசனை நடந்து வருகிறது. அதன் மூலம் முபாரக் பெயருக்கு மட்டும் தான் அதிபராக இருக்கக்கூடும். அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாலும், மக்களும் பிடிவாதமாக இருப்பதாலும் இந்த ஆலோசனை நடந்து வருகிறது என்று வால் ஸ்ட்ரீட் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications