ஜெ- எஸ்.ஏ.சந்திரசேகரன் மீண்டும் சந்திப்பு... அதிமுகவுக்கு விஜய் பிரச்சாரம்?

அரசியலில் குதிப்பது குறித்தும நடிகர் விஜய்யும் அவர் தந்தையும் மாறி மாறி அறிக்கைகள், பேட்டிகள் கொடுத்து வருகின்றனர்.
இப்போதைக்கு அரசியல் இல்லை என்று விஜய் கூறினாலும், 'அரசியல் ரீதியான நெருக்கடிகள் தனக்கு தொடர்வதால் வேறு வழியில்லை, நான் அரசியலில் இறங்கியாக வேண்டியுள்ளது' என்று விஜய் சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார்.
அவர் தந்தை எஸ் ஏ சந்திரசேகரனோ, அதிமுகவுக்கு ஆதரவாக வரும் தேர்தலில் பிரச்சாரம் செய்யும் திட்டமுள்ளதாகக் கூறியிருந்தார்.
இந்த நிலையில், நேற்று மாலை இரண்டாவது முறையாக ஜெயலலிதாவை அவர் சந்தித்துப் பேசினார். போயஸ் கார்டன் இல்லத்தில் நடந்த இந்தச் சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நீடித்தது.
கடந்த இரு மாதங்களுக்கு முன்பும் ஜெயலலிதாவை எஸ்.ஏ.சந்திரசேகரன் சந்தித்துப் பேசினார். இதையடுத்து அதிமுகவில் விஜய் இணைந்து விடுவார் என்றும், தன்னுடைய மக்கள் இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்றி அதிமுகவுக்கு ஆதரவு கொடுப்பார் என்றும் பேசப்பட்டது.
இதன்பிறகு விஜய் தன் மாவட்ட நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்து கருத்துகளையும் கேட்டறிந்தார். வருகிற சட்டப் பேரவைத் தேர்தலை அரசியல் இயக்கமாக நாம் சந்தித்தே ஆக வேண்டும் என நிர்வாகிகள் கருத்து தெரிவித்தாகக் கூறப்பட்டது. இருப்பினும் தன் அரசியல் பிரவேசம் குறித்து அமைதிகாத்து வந்தார் விஜய்.
இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு வெளியான 'காவலன்' திரைப்படம், சில பிரச்னைகளால் ஒரு நாள் தாமதமாக திரைக்கு வந்தது. படத்தைத் திரையிட திரையரங்குகள் கிடைக்காத நிலையில், ஒரு வார இடைவெளிக்குப் பின்னரே முக்கிய திரையரங்குகளில் 'காவலன்' திரையிடப்பட்டது.
பேனர் வைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சில திரையரங்குகளின் வாசலில் வைக்கப்பட்ட பேனர்களும் கிழித்தெறியப்பட்டன. இதுதொடர்பாக பல மாவட்டங்களில் காவல்துறையிடம் ரசிகர்கள் புகார் அளித்தனர்.
தனக்கு இந்த நெருக்கடிகளைக் கொடுத்து வருவது ஆளும் திமுகவினரே என்று இப்போது பகிரங்கமாக பேசி வருகிறார் விஜய். இதனால், இந்தத் தேர்தலில் அவரும் அதிமுகவுக்கு ஆதரவாகக் களமிறங்கக் கூடும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் ஜெயலலிதாவை மீண்டும் சந்தித்துப் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications