நாடாளுமன்றத் தொகுதிக்கு தலா ஒரு தொகுதி-அதிமுகவிடம் 39 தொகுதிகள் கேட்கும் மதிமுக

அதிமுக, மதிமுக தொகுதி பங்கீட்டுக் குழுவினர் நேற்று தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதிமுக தொகுதி பங்கீட்டுக் குழு உறுப்பினர்களான அதிமுக பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக தலைமை நிலையச் செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன், அதிமுக தேர்தல் பிரிவுச் செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரை, நேற்று மாலை அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில், மதிமுக திருப்பூர் மாவட்ட செயலாளர் ஆர்.டி.மாரியப்பன், காஞ்சீபுரம் மாவட்ட செயலாளர் க.சோமு, தலைமை நிலையச் செயலாளர் குருநாதன் ஆகியோருடன் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தை முடித்து வெளியே வந்த மதிமுக திருப்பூர் மாவட்ட செயலாளர் மாரியப்பன் நிருபர்களிடம் கூறுகையில்,
அ.தி.மு.க. தேர்தல் பணிக் குழுவுடன், ம.தி.மு.க. தேர்தல் பணிக் குழுவினராகிய நாங்கள் தொகுதிப் பங்கீடு குறித்து முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தினோம். தேர்தல் வியூகம் வகுப்பது, தேர்தல் பணி, தேர்தல் அறிக்கை ஆகியவை குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தினோம். எத்தனை தொகுதிகள், எந்தந்த தொகுதிகள் என்பது பற்றி கட்சித் தலைமைதான் முடிவு செய்து அறிவிக்கும்.
வைகோ போட்டியிடுவாரா என்பது எங்களுக்கு தெரியாது. இன்னும் சில கட்சிகள் கூட்டணியில் சேர இருக்கின்றன. எனவே அடுத்த கட்ட பேச்சு வார்த்தையும் நடக்கவுள்ளது என்றார்.
இந்தச் சந்திப்பின்போது அதிமுகவிடம் மதிமுக 39 தொகுதிகள் கேட்டதாகத் தெரிகிறது.
நாடாளுமன்றத் தொகுதிக்கு ஒரு சட்டசபைத் தொகுதி என்ற அடிப்படையில் 39 தொகுதிகளை கோரிய மதிமுக, தங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள 39 தொகுதிகளின் பட்டியலையும் அதிமுகவிடம் ஒப்படைத்தது.
கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில், 35 தொகுதிகளில் போட்டியிட்ட மதிமுக வாசுதேவநல்லூர், சிவகாசி, விருதுநகர், திருமங்கலம், தொண்டாமுத்தூர், கம்பம் ஆகிய தொகுதிகளில் மட்டுமே வென்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications