என்னை அரசியலில் சேர்த்ததும் ஜெ.தான், அதிமுகவிலிருந்து அனுப்பியதும் அவர்தான்-எஸ்.வி.சேகர்
சென்னை: என்னை அரசியலில் அறிமுகப்படுத்தி வைத்தவர் ஜெயலலிதாதான். ஆனால் அவர்தான் என்னை அதிமுகவிலிருந்தும் அனுப்பி வைத்தார் என்று கூறியுள்ளார் அங்கும் இங்குமாக அலைபாய்ந்து இன்று காங்கிரஸில் போய்ச் சேர்ந்துள்ள நடிகர் எஸ்.வி.சேகர்.
அதிமுக எம்.எல்.ஏவாக மயிலாப்பூரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் எஸ்.வி.சேகர். பின்னர் ஜெயலலிதாவுடன் பிணக்கு ஏற்படவே அவரை கட்சியிலிருந்து விரட்டியடித்தார் ஜெயலலிதா. இருந்தாலும் தனது எம்.எல்.ஏ பதவியை சற்றும் கைவிடாமல் தொடர்ந்து இறுகப் பற்றிக் கொண்டு நடை போட்டுக் கொண்டிருக்கும் சேகர், ஆரம்பத்தில் திமுகவுடன் நெருக்கமாக இருந்தார். பின்னர் திடீரென ராகுல் காந்தியை சந்தித்தார். இன்று காங்கிரஸில் வந்து சேர்ந்து கொண்டார்.
சத்தியமூர்த்தி பவனில், இன்று நடந்த நிகழ்ச்சியில் தங்கபாலு, ஜி.கே.வாசன், ஈவிகேஎஸ் இளங்கோவன், வசந்தகுமார், குமரி அனந்தன் ஆகிய கோஷ்டித் தலைவர்கள் முன்னிலையில் அவர் இணைந்தார். ஜி.கே.வாசன் முன்னிலையில் அவர் இணைந்ததால் அவர் வாசன் கோஷ்டியில் இணைந்திருப்பதாக கருதப்படுகிறது.
பின்னர் சேகர் பேசுகையில், இந்தியாவின் மிகப் பெரிய கட்சியாக காங்கிரஸ் திகழ்வதாகவும் அரசியல் நாகரீகமும் பேச்சு சுதந்திரமும், கருத்து சுதந்திரமும் உள்ள கட்சியாகவும் காங்கிரஸ் திகழ்கிறது.
அரசியலுக்கு என்னை அறிமுகப்படுத்தியவர் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாதான். என்னை அங்கிருந்து அனுப்பி வைத்தவரும் அவர்தான் என்றார்.
அதன் பிறகு செய்தியாளர்களையும் சந்தித்தார் சேகர். அப்போது சீட்டுக்காக கட்சியில் சேர்ந்துள்ளீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, தேர்தலில் போட்டியிட நான் சீட் எதுவும் கேட்கவில்லை என்றார்.
நீங்கள் காங்கிரஸில் இணையும் முடிவு குறித்து கருணாநிதி, மு.க.ஸ்டாலினிடம் பேசினீர்களா என்ற கேள்விக்கு, காங்கிரஸ் கட்சியில் இணையும் என்னுடைய முடிவு குறித்து முதல்வரை, துணை முதல்வரையும் சந்தித்து தெரிவித்தேன். அவர்கள் என்னை வாழ்த்தினார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications