என்னையும் வைகோவையும் கொல்ல சதி என்கிறார் தா.பாண்டியன்
நாகப்பட்டினம்: தா.கிருஷ்ணனை கொன்றதைப் போல வைகோவையும், என்னையும் முடித்திடலாம் என சிலருக்கு ஆசை உள்ளது. எதையும் சந்திக்க நாங்கள் தயாராக உள்ளாம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறினார்.
தமிழக மீனவர்களை காக்கக் கோரியும், இலங்கைப் படையினரால் அவர்கள் கொல்லப்படுவதைத் தடுக்கத் தவறிய மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் நாகப்பட்டிணம் அவுரித் திடலில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் நேற்று உண்ணாவிரதம் நடந்தது.
அதில் பேசிய பாண்டியன், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவது 1980ம் ஆண்டுகளில் இருந்து தொடர்கிறது. மேற்கு வங்கம், ஒரிஸ்ஸா, பீகாரில் மீனவர்கள் எல்லை தாண்டும் போது அவர்களை எந்த நாடும் சுட்டுக் கொன்றதில்லை. மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
1980ல் இருந்து 2011ம் ஆண்டு வரை, தமிழக மீனவர்கள் 800 பேர் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். மீனுக்கு இருக்கும் மரியாதை கூட தமிழக மீனவனுக்கு இல்லை. இலங்கைக்கு நன்கொடையாக வழங்கிய கச்சத்தீவு நிபந்தனைகளுடன் கொடுக்கப்பட்டுள்ளது. நிபந்தனைப்படி தமிழக மீனவர்கள் தங்கி ஓய்வெடுக்க, வலைகளை உலர்த்த என அனைத்துத் தகுதிகளும் உண்டு.
மதுரையில் தா.கிருஷ்ணனை கொன்றதைப் போல் வைகோவையும், என்னையும் முடித்திடலாம் என சிலருக்கு ஆசை உள்ளது. எதையும் சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றார்.
இலங்கையில் சீன தளம்-வைகோ:
கூட்டத்தில் வைகோ பேசுகையில், இப்போது இலங்கையில் சீனா தளம் அமைத்து வருகிறது. இந்தியாவுக்கு, தெற்கிலிருந்து ஆபத்து காத்திருக்கிறது. இதனால், முதலில் பாதிக்கப்படுவது தமிழர்களாகத்தான் இருப்பார்கள். இந்தியாவின் பகை நாடுகளுக்கு ராஜபக்சே, வெளிப்படையாக ஆதரவு அளித்து வருகிறார்.
இதுவரை ஆயிரம் முறைக்கு மேல் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இது பற்றி பிரதமர் மன்மோகன்சிங்கிடம் கூறினால் மீனவர்கள் எல்லை தாண்டுகிறார்கள் என்று கூறுகிறார். பஞ்சாப் மீனவர்கள் எல்லை தாண்டினால் பாகிஸ்தான் அரசு கைது செய்து ஒப்படைகிறது.
மேற்கு வங்க மீனவர்கள் பங்களாதேஷ் எல்லைக்கு சென்று விட்டால் கைது செய்து ஒப்படைக்கிறார்கள். ஆனால் இலங்கை கடற்படை மட்டும் ஏன் துப்பாக்கியால் சுட்டு கொல்கிறது. தமிழக மீனவர்களும் இந்திய பிரஜைகள் தானே. இந்திய கடற்படை என்ன செய்கிறது. சூறை காற்றையும், சுறா மீனையும் எதிர்த்து படகு செலுத்தி மீன்பிடிக்கும் மீனவர்களை என் அரசு பாதுகாக்கவில்லை.
இனியும் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது.இந்திரா காந்திக்கு சரித்திரம் தெரியும் இலங்கையை பற்றி நன்றாக அறிந்திருந்தார். அதனால்தான் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதியில் வசிப்பவர்கள் இலங்கையின் பூர்வ குடிமக்கள் என்றார். ஆனால் இன்று தமிழர்கள் வசிக்கும் வீடுகளை சிங்கள ராணுவத்தினர் சுற்றி சுற்றி வருகிறார்கள்.
இலங்கை முகாம்களில் தங்கியுள்ளவர்களில் 300 பேருக்கு 30 பேர் சாப்பிடக்கூடிய அளவுதான் உணவு வழங்குகிறார்கள். வங்க கடலில் மீனவர் ஜெயக்குமார் கழுத்தை நெரித்த கயிறு விரைவில் ராஜபக்சேயின் கழுத்தில் சர்வதேச நீதிமன்றம் சார்பில் விழும். அதுவரை தமிழர்கள் மனதில் எரியும் தீ அணையாது.
வாஜ்பாய் அரசு ஈழத் தமிழர்களுக்குச் செய்த உதவிகளை மறக்க முடியாது. ஆனால், சோனியா காந்தி தலைமையிலான மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு தமிழர்களின் உணர்வுகளை துளியும் மதிப்பதில்லை. அதனால்தான் தமிழக மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படையினரின் தாக்குதல் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
2ஜி ஊழல் பிரச்சனை கிராமங்களைச் சென்றடைந்திருக்காது. ஒரு வாக்குக்கு ரூ. 5,000 பணம் கொடுத்தால், வரும் தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் எனத் தவறாகக் கருதுகிறது திமுக. நகர்ப் பகுதிகளில் வசிப்பவர்களைவிட, விரிவாகச் செய்திகளை அறிந்து கொள்பவர்கள் கிராமத்தில் வசிப்பவர்கள் என்பது தேர்தல் முடிவில் தெரியும்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அரசு அகற்றப்படும். அதிமுக தனித்து ஆட்சி அமைப்பது உறுதி என்றார்.












Click it and Unblock the Notifications