தொகுதிப் பங்கீடு: திமுக குழுவில் அழகிரி-தயாநிதி விரைவில் சேர்ப்பு?

காங்கிரஸ் உள்பட கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சு நடத்த முதல்வர் கருணாநிதி சில நாட்களுக்கு முன் குழு அமைத்தார்.
அதில், துணை முதலமைச்சரும், பொருளாளருமான மு.க.ஸ்டாலின், முதன்மைச் செயலாளரும் அமைச்சருமான ஆற்காடு வீராசாமி, துணைப் பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன், உயர்நிலை செயல் திட்ட குழு உறுப்பினரும் அமைச்சருமான பொன்முடி, நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோருக்கு இடம் தரப்பட்டுள்ளது.
இதில் அழகிரிக்கு இடம் தரப்படாதது அவரையும் அவரது ஆதரவாளர்களையும் கடுமையாக எரிச்சலடையச் செய்துள்ளது. இது குறித்து தலைமையிடம் அழகிரி தரப்பு தந்த நெருக்குதலையடுத்து அவரையும் இந்தக் குழுவில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
அதே நேரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் ஆதரவைப் பெற்றுள்ளதோடு, பொதுச் செயலாளர் ராகுல் காந்தியுடன் நெருக்கமாகவும் உள்ள மத்திய அமைச்சர் தயாநிதி மாறனையும் குழுவில் சேர்ப்பது பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடக்க உதவும் என திமுக தரப்பு கருதுகிறது.
இதையடுத்து அவரும் குழுவில் சேர்க்கப்படுவார் என்று கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.
தென் மாவட்டங்களில் திமுகவுக்கான தொகுதிகளையும் வேட்பாளர்களையும் தேர்வு செய்வதில் மிக முக்கிய பங்கு வகிக்கப் போவது அழகிரி தான் என்ற நிலையில், அவரது பெயர் திமுக குழுவில் இடம் பெறாதது பல்வேறு ஆச்சரியக் குறிகளை எழுப்பியது. தொகுதி்கள் தேர்வில் அவரை ஒதுக்கி வைப்பதன் மூலம் வேட்பாளர் தேர்விலும் அவரை கட்டுப்படுத்திவிட திமுகவில் ஒரு தரப்பு கருதியதாகத் தெரிகிறது. இதை உணர்ந்தே குழுவில் தன்னைச் சேர்க்க வேண்டும் என்று தலைமைக்கு அழகிரி நெருக்கடி தந்ததாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications