இனி ஸ்பெக்ட்ரம் உரிமத்துக்கு 6 மடங்கு அதிக விலை! - ட்ராய்
டெல்லி: ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை உரிமம் பெற இனி இப்போதுள்ளதைப் போல 6 மடங்கு அதிக தொகையை விலையாக நிர்ணயிக்க வேண்டும் என தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்து, ரூ 1.76 லட்சம் கோடி அளவுக்கு இழப்பும் ஏற்பட்டது. இதனால் இனி ஒதுக்கீடு செய்யும் ஸ்பெக்ட்ரம் தொடர்பாக புதிய வழிகாட்டுதலை தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் வழங்கி உள்ளது.
இதற்கு முன்பு 6.2 மெகா ஹெட்ஸ் கொண்ட அலை வரிசை தொகுப்புக்கு ரூ.1658 கோடி என டெலிபோன் ஒழுங்குமுறை ஆணையம் அடிப்படை விலை நிர்ணயித்திருந்தது.
இப்போது இதை ரூ.10 ஆயிரத்து 972 கோடி என நிர்ணயித்து உள்ளனர். இது 6 மடங்கு அதிக விலையாகும். 6.2 மெகா ஹெட்சுக்கு மேல் கூடுதலாக பெறும் ஒவ்வொரு மெகா ஹெர்ட்சுக்கும் அடிப்படை விலை ரூ.4571 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிராந்தியத்திலும் ஸ்பெக்ட்ரமுக்கு தனித் தனி விலை நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
வட்டார (சர்க்கிள்) வாரியாகவும், ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி 6.2 மெகா ஹெட்சுக்கு கீழே ஒவ்வொரு மெகா ஹெட்சுக்கு காஷ்மீரில் ரூ.7 கோடியே 60 லட்சமும், அதிகபட்சமாக தமிழ் நாட்டில் ரூ.187 கோடியே 38 லட்சமும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 6.2 மெகா ஹெட்சுக்கு மேலே காஷ்மீரில் ஒவ்வொரு மெகாஹெட்சுக்கும் ரூ.22 கோடியே 89 லட்சமும் அதிக பட்சமாகவும், ஆந்திராவில் ரூ.431 கோடியே 95 லட்சமும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை நிர்ணய சிபாரிசை தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தொலைத் தொடர்புத் துறையிடம் வழங்கி உள்ளது. இதன் மீது அவர்கள் இறுதி முடிவு எடுப்பார்கள். இனி புதிதாக ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை வாங்குபவர்களும், ஏற்கனவே ஒதுக்கீட்டை பெற்றவர்கள் காலக்கெடு முடிந்து புதுப்பித்தாலும் புதிய கட்டண முறையே பின்பற்றப்படும்.












Click it and Unblock the Notifications