ஸ்பெக்ட்ரம்: பொதுக்கணக்கு குழு முன் ஆஜராக சிபிஐ இயக்குநருக்கு உத்தரவு

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகளால் ரூ.1.76 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி (சிஏஜி) அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதையடுத்து, இது குறித்து விசாரிக்க நாடாளுமன்றக் கூட்டுக் குழுவை (ஜேபிசி) அமைக்க வேண்டும் என்று அதிமுக, பாஜக, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
ஆனால், அந்தக் கோரிக்கையை நிராகரித்த மத்திய அரசு பாஜக தலைவர் முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு (பிஏசி) இது குறித்து விசாரிக்கும் என்று அறிவித்தது. இதையடுத்து இந்தக் குழு தனது விசாரணையை நடத்தி வருகிறது.
முன்னாள் தொலைத் தொடர்புத்துறை செயலாளர்கள் எஸ்.எஸ்.பெகுரியா, டி.எஸ்.மாத்தூர், டிராய் அமைப்பின் முன்னாள் தலைவர் பிரதீப் பைஜால், தொலைத் தொடர்பு நிதித்துறை ஆணைய முன்னாள் உறுப்பினர் மஞ்சு மாதவன், நிதித்துறை செயலராக இருந்த தற்போதைய ரிசர்வ் வங்கியின் ஆளுனர் சுப்பராவ் ஆகியோரிடமிருந்து இந்தக் குழு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான ஆதாரங்களை இந்தக் குழு கேட்டு வாங்கியது.
இந் நிலையில் இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா, அவரது உறவினர்கள், நிரா ராடியா, பெகுரியா, ராசாவின் உதவியாளர் சந்தோலியா உள்ளிட்டோரின் வீடுகளிலும் அலுவலகங்களும் சோதனை நடத்திய சிபிஐ பின்னர் ராசா, பெகுரியா, சந்தோலியாவை கைது செய்தது.
மேலும் ஸ்பெக்ட்ரத்தை மிகக் குறைந்த விலைக்கு வாங்கி அதை பல மடங்கு விலை வைத்து விற்று லாபமடைந்த ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பல்வாவும் கைது செய்யப்பட்டார்.
இந் நிலையில், சிபிஐ இயக்குனர் ஏ.பி.சிங் அடுத்த வாரம் நேரில் ஆஜராகி 2ஜி வழக்கு தொடர்பான ஆதாரங்களை வழங்க வேண்டும் என பொதுக் கணக்குக் குழு உத்தரவிட்டுள்ளது.
அப்போது இந்த வழக்குத் தொடர்பான மேலும் பல விவரங்களையும் ஜோஷி தலைமையிலான குழு அவரிடம் கேட்கும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications